ஹதீஸ்கள்
#7197
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இப்னுல் லுத்தபிய்யா (அல்லது இப்னுல் உத்தபிய்யா (ரலி) அவர்களை பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத் பொருட்களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். (அவர் பனூசுலைம் குலத்தாரிடம் சென்று ஸகாத் பொருட்களை வசூலித்துக்கொண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அப்போது இப்னுல் லுத்தபிய்யா (ரலி) அவர்கள், “இது உங்களுக்காக உள்ளது; இது எனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு” என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் (உங்களது வாதத்தில்) உண்மையாளராக இருந்தால் நீங்கள் உங்கள் தந்தையின் வீட்டிலும் தாயின் வீட்டிலும் உட்கார்ந்துகொண்டு உங்களைத் தேடி அன்பளிப்பு வருகிறதா பாருங்கள்” என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி விட்டு, “இறைவாழ்த்துக்குப்பின் கூறுகின்றேன்: அல்லாஹ் என்னிடம் ஒப்படைத்துள்ள பணிகளில் சிலவற்றுக்கு உங்களில் சிலரை நான் அதிகாரிகளாக நியமிக்கிறேன். ஆனால், அவர் (போய்விட்டு) வந்து இது உங்களுக்கு; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப் பட்டது என்று கூறுகின்றாரே! அவர் வாய்மையாளராக இருந்தால் தம் தந்தையின் வீட்டிலும் தாயின் வீட்டிலும் உட்கார்ந்துகொண்டு தம்மைத் தேடி அன்பளிப்பு வருகின்றதா? என்று பார்க்கட்டுமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரும் அதிலிருந்து எதையும் முறையின்றி எடுக்கக் கூடாது. அப்படி எடுப்பவர் மறுமை நாளில் அதைச் சுமந்தபடியே அல்லாஹ்விடம் வருவார். அறிக! (அன்று) அல்லாஹ்விடம் கத்தும் ஒட்டகத்துடனும் மாட்டுடனும் ஆட்டுடனும் ஒருவர் வருவதை நிச்சயம் நான் அறிவேன்” என்று சொன்னார்கள். பின்னர் நாங்கள் நபியவர்களுடைய அக்குள்களின் வெண்மையைப் பார்க்கும் அளவுக்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, “(இறைவா!) நான் எடுத்துரைத்து விட்டேனா?” என்று (வானை அண்ணாந்து நோக்கிக்) கேட்டார்கள்.62 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7197
- Book Index
- 58
Grades
- -