ஹதீஸ்கள்
#7097
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றுக்குத் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னாலேயே நான் சென்றேன். இறுதியில் (குபாவிற்கு அருகிலுள்ள ‘பிஃரு அரீஸ்’ எனும்) தோட்டத்திற்குள் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது நான் அதன் தலைவாயிலில் அமர்ந்துகொண்டேன். நபியவர்கள் எனக்குக் கட்டளையிடாமலேயே “இன்றைய தினம் நான் அவர்களின் வாயிற்காவலனாக இருப்பேன்” என்று கூறிக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் சென்று தமது இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டு (அங்கிருந்த) கிணற்றின் சுற்றுச் சுவரில் தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்கவிட்டபடி அமர்ந்துகொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து நபியவர்களிடம் செல்ல அன்னாரின் அனுமதி கேட்கும்படி சொன்னார்கள். நான், “உங்களுக்காக நான் (நபியவர்களிடம்) அனுமதி கேட்கும்வரை நீங்கள் அப்படியே (இங்கே) இருங்கள்” என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் (அவ்வாசலில்) நின்றுகொள்ள, நான் நபியவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! (இதோ!) அபூபக்ர் (ரலி) அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி அளியுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறுங்கள்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் வந்து தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் அவற்றை தொங்கவிட்டபடி அமர்ந்து கொண்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நான், “இங்கேயே இருங்கள். உங்களுக்காக நான் நபி (ஸல்) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கின்றேன்” என்று கூறினேன். (நான் அவர்களுக்காக அனுமதி கேட்டபோது) நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி அளியுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று (என்னிடம்) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் (உள்ளே) வந்து, நபி (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கம் தம் கால்களைத் திறந்து அந்தக் கிணற்றுக்குள் தொங்கவிட்டபடி அமர்ந்துகொண்டார்கள். அந்தச் சுவர் நிரம்பிவிட்டது. அதில் (இனி யாரும்) அமர்வதற்கு இடம் இருக்கவில்லை. பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் வந்தார்கள். நான், “நீங்கள் இங்கேயே இருங்கள்; உங்களுக்காக நான் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டு வருகின்றேன்” என்று சொன்னேன். (நான் உள்ளே சென்றபோது) நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி அளியுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி கூறுங்கள். அத்துடன் அவருக்கு நேரவிருக்கும் சோதனையையும் கூறுங்கள்” என்றார்கள். (அவ்வாறே நான் அனுமதி வழங்கி நற்செய்தி தெரிவித்தேன்.) உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்து, ஏற்கெனவே அமர்ந்திருந்தவர்களுடன் அமர இடம் இல்லாததால் திரும்பிச் சென்று அவர்களுக்கு எதிரிலிருந்த அக்கிணற்றின் மற்றொரு சுற்றுச் சுவரில் தம் கால்களைத் திறந்து அவற்றைக் கிணற்றில் தொங்கவிட்டபடி அமர்ந்தார்கள். என் சகோதரர் ஒருவரை எதிர்பார்த்த படி அவர் (அங்கு) வர வேண்டும் என்று நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க லானேன். அறிவிப்பாளர் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான், “(நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் அவர்களுக்கு எதிரே உஸ்மான் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த நிலையும் தற்போது) அவர்களின் கப்றுகள் (மண்ணறைகள்) இங்கு ஒரே இடத்தில் அமைந்திருக்கும் நிலையையும் உஸ்மான் (ரலி) அவர்கள் பிரிந்து (‘ஜன்னத்துல் பகீஉ’ மையவாடிக்கு) சென்றுவிட்ட நிலையையும் குறிப்பதாக விளக்கம் கண்டேன்.34 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7097
- Book Index
- 48
Grades
- -