ஹதீஸ்கள்
#7018
ஸஹீஹ் அல்-புகாரீ - Interpretation of Dreams
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் அளித்திருந்த அன்சாரிப் பெண்களில் ஒருவரான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது: (புலம்பெயர்ந்து மதீனா வந்தடைந்த) முஹாஜிர்கள் (யார் எவருடைய வீட்டில்) தங்குவ(து என்பதை முடிவு செய்வ)தற்காக அன்சாரிகள் சீட்டுக்குலுக்கிப்போட்ட போது, உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் எங்கள் பொறுப்பில் வந்தார்கள். அப்பால் அவர் நோய்வாய்ப்பட்டார். அவருக்குச் சிகிச்சை அளித்தோம். இறுதியில் அவர் இறந்துபோனார். பிறகு நாங்கள் அவரை (நீராட்டி) அவரது ஆடையிலேயே கஃபனிட்டோம். இந்த நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான் (உஸ்மானை நோக்கி), “சாயிபின் தந்தையே! உம்மீது இறையருள் பொழியட்டும்; அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்” என்று சொன்னேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “(அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது) உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! (இது பற்றி) எனக்குத் தெரியாது” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “(உஸ்மான் பின் மழ்ஊன்) இறந்துவிட்டார். அல்லாஹ்விடமிருந்து அவருக்கு நான் நன்மையையே எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராயிருந்தும் என்னிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பதோ, உங்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பதோ எனக்கே தெரியாது” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூறுவதேயில்லை. பிறகு உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுக்குரிய நீரூற்று ஒன்று ஓடுவதை நான் (கனவில்) கண்டேன். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிச் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், “அது (வாழ்நாளில் அவர் புரிந்த) நற்செயல். அது (இன்று) அவருக்காக(ப் பெருக்கெடுத்து) ஓடுகிறது” என்று சொன்னார்கள்.37 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #7018
- Book Index
- 35
Grades
- -