ஹதீஸ்கள்
#6880
ஸஹீஹ் அல்-புகாரீ - Blood Money
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் தங்கள் குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்குப் பதிலாக மக்கா வெற்றி ஆண்டில் ‘பனூ லைஸ்’ குலத்தாரில் ஒருவரை குஸாஆ குலத்தார் கொலை செய்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (உரையாற்றுகையில் பின்வருமாறு) கூறினார்கள்: இந்த(ப் புனித) மக்கா நகரைவிட்டு யானைப் படையை அல்லாஹ் தடுத்து நிறுத்தினான். மேலும், மக்காவாசிகள் மீது அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளருக்கும் ஆதிக்கம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப்போவதில்லை. நினைவில் கொள்க! எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் யுத்தம் புரியவே அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை! சந்தேகத்திற்கிடமின்றி (இங்கு) போர் புரிவது இந்த நிமிடத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடி பிடுங்கப்படக்கூடாது. இதன் மரம் வெட்டப்படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர (பொருளுக்கு உரிமையற்றவர் யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால் அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு யோசனைகளில் சிறந்ததை அவர்கள் தேர்வு செய்யலாம்” என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ‘அபூஷாத்’ என்றழைக்கப்பட்ட ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவருக்கு (என் உரையை) எழுதிக்கொடுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது குறைஷியரில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (மக்காவின் செடிகொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து வாசனைத் தாவரமான) ‘இத்கிர்’ புல்லிற்கு விலக்கு அளியுங்கள். ஏனென்றால், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இத்கிர் புல்லைத் தவிர!” என்று சொன்னார்கள்.17 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூநுஐம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘யானைப் படை’ என்பதற்குப் பதிலாக, ‘கொலை செய்வதை’ என்று இடம்பெற்றுள்ளது எனச் சிலர் அறிவித்துள்ளனர். உபைதுல்லாஹ் பின் மூசா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘கொலையுண்ட வரின் குடும்பத்தார் (சார்பாக) பழிவாங்கல்’ என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Blood Money
- Hadith Index
- #6880
- Book Index
- 19
Grades
- -