ஹதீஸ்கள்
#6728
ஸஹீஹ் அல்-புகாரீ - Laws of Inheritance
முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மாலிக் பின் அவ்ஸ் பின் அல் ஹதஸான் (ரஹ்) அவர்களிடம் சென்று (ஃபதக் தொடர்பான நிகழ்ச்சி குறித்துக்) கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்களின் மெய்க்காவலர் ‘யர்ஃபஉ’ என்பவர் அவர்களிடம் வந்து, “உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்கத் தங்களுக்கு இசைவு உண்டா?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள், ‘ஆம்’ என்று கூறி, அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். (சற்று நேரத்திற்குப்) பிறகு யர்ஃபஉ (வந்து), “அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் சந்திப்பதில் தங்களுக்கு இசைவு உண்டா?” என்று கேட்டார். ‘ஆம்’ என்றார்கள். (அனுமதிக்குப்பின் அவர்கள் இருவரும் உள்ளே வந்தனர்). அப்பாஸ் (ரலி) அவர்கள், “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக் கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே (இந்தச் சொத்து தொடர்பாகத்) தீர்ப்ப ளியுங்கள்” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “வானமும் பூமியும் எந்த அல்லாஹ்வின் கட்டளை யால் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே” என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்த) அந்தக் குழுவினர், “நபியவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்” என்று பதிலளித்தனர். உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அவ்விருவரும், “(ஆம்) அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்” என்று பதிலளித்தனர். உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயம் குறித்துப் பேசுகிறேன்: (போரிடாமல் கிடைத்த) இந்த (ஃபய்உ)ச் செல்வத்திலிருந்து சிறிதளவைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கினான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை வழங்கவில்லை” என்று கூறிவிட்டு, “அல்லாஹ் எந்தச் செல்வத்தை (எதிரிகளான) அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச்சென்றதால் கிடைத்ததன்று. மாறாக அல்லாஹ், தான் நாடுகின்றவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான்” எனும் (59:6ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து, “எனவே, இது இறைத் தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக்கொள்ளவில்லை; அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் அதிலிருந்து இந்தச் செல்வம் மட்டுமே எஞ்சியது. நபி (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை அவர்களுக்குக் கொடுத்துவந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு எஞ்சியதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள்.” (இவ்வளவும் சொல்லிவிட்டு, அக்குழுவினரை நோக்கி) “அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கின்றேன்: இதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘ஆம்’ (அறிவோம்) என்று பதிலளித்தனர். பிறகு, அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும், “உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நீங்கள் இதை அறிவீர்களா?” என்று வினவினார்கள். அவர்கள் இருவரும், ‘ஆம்’ (அறிவோம்) என்று பதிலளித்தனர். (தொடர்ந்து), பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக்கொண்டான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்” என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தைத் தமது கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான். அப்போது நான், “நான் அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதியின் பிரதிநிதியாவேன்” என்று கூறி, அதை (என் ஆட்சிக் காலத்தில்) இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்துகொண்ட முறைப்படி செயல் பட்டுவந்தேன். பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் வந்தீர்கள்; (பேசினீர்கள்.) உங்கள் இருவரின் கோரிக்கையும் ஒன்றாகவே இருந்தது; உங்கள் இருவரின் விஷயமும் ஒன்றாகவே இருந்தது. (அப்பாஸ் (ரலி) அவர்களே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரரின் புதல்வர் (நபி) இடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டு வந்தீர்கள். அவரும் (அலீயும்) தம் துணைவியாருக்கு அவருடைய தந்தை யிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டு என்னிடம் வந்தார். அப்போது நான் (உங்கள் இருவரிடமும்,) “(நபிகளார் செயல்பட்டவாறு செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில்) நீங்கள் இருவரும் விரும்பினால் உங்கள் இருவரிடமும் அதைக் கொடுத்துவிடுகின்றேன்” என்று சொன்னேன். (இப்போது) அதன்றி வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகின்றீர்களா? எவனது அனுமதியுடன் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் அந்தச் செல்வம் தொடர்பாக இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் இறுதிநாள்வரை அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். அதை உங்களுக்குப் பதிலாக நானே பராமரித்துக்கொள்வேன்” என்று சொன்னார்கள்.9 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Laws of Inheritance
- Hadith Index
- #6728
- Book Index
- 5
Grades
- -