ஹதீஸ்கள்
#6452
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: யாரைத் தவிர வேறு இறைவ னில்லையோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (கடும்) பசியால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக்கொண்டதும் உண்டு. ஒருநாள் நான் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளி வாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைக்) கடந்துசென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். எனக்கு வயிறார உணவளிப்பார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்று விட்டார்கள்; (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னைக் கடந்துசென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் எனக்கு வயிறார உணவளிப்பார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் நான் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள். பிறகு அபுல்காசிம் (நபி -ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்து கொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, ‘அபூஹிர்ரே!’ (அபூஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன்; அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். “(என்னைப்) பின்தொடர்ந்து வா!” என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் துணைவியாரிடம்) “இந்தப் பால் எங்கிருந்து வந்தது?” என்று கேட்டார்கள். அவர்கள் “இன்ன ‘ஆண்’ அல்லது ‘பெண்’ தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘அபூஹிர்’ என அழைத்தார்கள். நான் “இதோ வந்துவிட்டேன்; அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். “திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள்” என்று சொன்னார்கள். திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப் பொருள் வந்தால் அதை இவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருட்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்து வரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள். இப்போது நபி (ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. “(இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணைவாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்ணை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது” என (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டேன். பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி (ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘அபூஹிர்’ என அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள்” என்று சொன்னார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும்வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும்வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும்வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டுசென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தமது கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு ‘அபூஹிர்!’ என்று அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள் “நானும் நீங்களும் (மட்டும்தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)” என்று கேட்டார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! (ஆம்.) உண்மைதான்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “உட்கார்ந்து (இதைப்) பருகுங்கள்” என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். “இன்னும் பருகுங்கள்” என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் ‘பருகுங்கள்’ என்று சொல்óக் கொண்டேயிருக்க, நான் பருகிக் கொண்டேயிருந்தேன். இறுதியில் “இல்லை; சத்திய (மார்க்க)த் தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன்மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “(சரி) அதை எனக்குக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பையைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6452
- Book Index
- 41
Grades
- -