ஹதீஸ்கள்
#6391
ஸஹீஹ் அல்-புகாரீ - Invocations
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட் டப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), “(ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக்கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அது என்ன? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்: (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டுபேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும், மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்துகொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், “இந்த மனிதரின் நோய் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவருடைய தோழர், “இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளிக்க, முதலாமவர், “இவருக்குச் சூனியம் வைத்தது யார்?” என்று வினவினார். அதற்கு “லபீத் பின் அல்அஃஸம்” என்று தோழர் பதிலளித்தார். “அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று முதலாமவர் கேட்க, “சீப்பிலும், சிக்கு முடியிலும், பேரீச்சம்பாளையின் உறையிலும்” என்று பதிலளித்தார். அவர், “அது எங்கே உள்ளது?” என்று கேட்க, மற்றவர், “தர்வானில் உள்ளது” என்றார். -’தர்வான்’ என்பது பனூஸுரைக் குலத்தாரிடையே இருந்த ஒரு கிணறாகும்.- பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு) விட்டு என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம்மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன” என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், “அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள்ளே இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (ஆகவேதான், அதை வெளியே எடுக்கவில்லை)” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு தொடர்களில், “நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது; நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்)” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.72 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invocations
- Hadith Index
- #6391
- Book Index
- 86
Grades
- -