ஹதீஸ்கள்
#6283
ஸஹீஹ் அல்-புகாரீ - Asking Permission
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘குபா’ எனுமிடத்திற்குச் சென்றால் (தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். (அவ்வாறு செல்லும் போது) உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளிப்பார்கள். -உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியாராவார்.- அவ்வாறே ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களுக்கு உம்மு ஹராம் உணவளித்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) உறங்கினார்கள். பிறகு எழுந்து சிரித்தார்கள். உடனே உம்மு ஹராம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடல்மீது பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் ‘மன்னர்களாக’ அல்லது ‘மன்னர்களைப் போன்று’ இருந்தார்கள்” என்று கூறினார்கள். அப்போது, “என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு தமது தலையை வைத்து உறங்கினார்கள். பின்னர் விழித்துச் சிரித்தார்கள். அப்போதும் “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என உம்மு ஹராம் கேட்க, முன்போலவே நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது, என்னையும் அவர்களில் ஒருவராக ஆக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என உம்மு ஹராம் கேட்டுக்கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (கடல் பயணம்செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக விளங்குவீர்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (அறப்போருக்காக) கடல் பயணம் மேற்கொண்டார்கள். கடலிலிருந்து அவர்கள் புறப்பட்டபோது தமது ஊர்திப் பிராணியிலிருந்து விழுந்து இறந்துவிட்டார்கள்.63 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Asking Permission
- Hadith Index
- #6283
- Book Index
- 56
Grades
- -