ஹதீஸ்கள்
#6259
ஸஹீஹ் அல்-புகாரீ - Asking Permission
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரைவீரர்களான என்னையும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களையும் அபூமர்ஸத் கன்னாஸ் பின் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி) அவர்களையும், “நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ எனும் இடம்வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகப் பல்லக்கில்) இணைவைப்பாளர்களில் ஒருத்தி இருப்பாள். இணைவைப்பாளர்க(ளின் தலைவர்க)ளுக்கு ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ அனுப்பியுள்ள (நமது இரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். (அவளிடமிருந்து அக்கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)” என்று கூறி அனுப்பினார்கள். (நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தனது ஒட்டகத்தில் சென்றுகொண்டிருக்க அவளை நாங்கள் சென்றடைந்தோம். “உன்னிடம் உள்ள கடிதம் எங்கே? (அதை எடு)” என்று கேட்டோம். அவள், “என்னிடம் கடிதம் ஏதுமில்லை” என்று பதிலளித்தாள். அவளிருந்த ஒட்டகத்தை நாங்கள் படுக்கவைத்து அதன் பல்லக்கினுள் (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். (கடிதம்) ஏதும் கிடைக்கவில்லை. என் நண்பர்கள் இருவரும், “கடிதம் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லையே!” என்று சொன்னார்கள். நான் (அவளிடம்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று நான் உறுதியாக அறிந்துள்ளேன். எவன்மீது சத்தியம் செய்யப்படுமோ அ(ந்த இறை)வன்மீதாணையாக! ஒன்று நீயாகக் கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை (சோதனையிடுவதற்காக உனது ஆடையை) நான் கழற்ற வேண்டியிருக்கும்” என்று சொன்னேன். நான் விடாப்பிடியாக இருப்பதைக் கண்ட அவள், (கூந்தல் நீண்டு தொங்கும்) தனது இடுப்புப் பகுதிக்குத் தனது கையைக் கொண்டுசென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். (கடிதம் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்களை நோக்கி,) “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமுள்ளவனாக நடந்துகொள்வதைத் தவிர வேறெதுவும் எனக்கு நோக்கமில்லை. நான் (எனது மார்க்கத்தை) மாற்றிக்கொள்ளவுமில்லை; வேறு மதத்தைத் தேடவுமில்லை. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி, மக்களையும் எனது செல்வத் தையும் பாதுகாக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் (முஹாஜிர்) தோழர்கள் அனைவருக்குமே அவர் களுடைய மனைவி, மக்களையும் அவர் களது செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் மக்காவில் உள்ளனர்” என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி நல்லதையே கூறுங்கள்” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், “இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கை யாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உமரே! உமக்கென்ன தெரியும்? பத்ர் போரில் கலந்துகொண்டவர்களிடம் அல்லாஹ், ‘நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது’ என்று கூறிவிட்டிருக்கலாம் அல்லவா?” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்களுடைய கண்கள் கண்ணீர் உகுத்தன. மேலும், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.37 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Asking Permission
- Hadith Index
- #6259
- Book Index
- 33
Grades
- -