ஹதீஸ்கள்
#6207
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து, தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக்கொண்டு ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல்நலம் குன்றி) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். இது பத்ர் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது. நாங்கள் இருவரும் பயணித்து ஓர் அவையைக் கடந்துசென்றோம். அந்த அவையில் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இருந்தார். அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்குமுன் இது நடந்தது. அந்த அவையில் முஸ்óம்கள், சிலை வழிபாட்டாளர்களான இணை வைப்பாளர்கள், யூதர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். முஸ்லிம்களில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் இருந்தார்கள். (எங்கள்) ஊர்திப் பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்து கொண்ட போது (நயவஞ்சகர்) அப்துல்லாஹ் பின் உபை தமது மேல்துண்டால் தமது மூக்கைப் பொத்திக்கொண்டு, “எங்கள்மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்” என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(ந்த அவையில் இருந்த)வர்களுக்கு சலாம் சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அழைத்தார்கள். மேலும், அவர்களுக்கு குர்ஆனை ஓதிக் காட்டினார்கள். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி,) “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்று மில்லை. (ஆனாலும்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை தராதீர். உம்மிடம் வருவோரிடம் (இதை) எடுத் துரையுங்கள்” என்றார். (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் தூதரே! (இந்த) அவையிலேயே (இதை) எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்” என்றார்கள். இதையொட்டி முஸ்லிம்களும் இணை வைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரை யொருவர்) ஏசத் தொடங்கி தாக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் மௌனமாகும்வரை அமைதிப்படுத்திக்கொண்டேயிருந்தார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்து சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, “சஅதே! அபூஹுபாப் (அப்துல்லாஹ் பின் உபை) சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? அவர் இப்படி இப்படிச் சொன்னார்” என்று அப்துல்லாஹ் பின் உபை சொன்னதைக் கூறினார்கள். (இதைக் கேட்ட) சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட் டும். அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன்மீது சத்தியமாக! இந்த (மதீனா) நகரவாசிகள் (அப்துல்லாஹ் பின் உபை எனும்) அவருக்குக் கிரீடம் அணிவித்து அவருக்கு முடிசூட்டிட முடிவு செய்துவிட்டிருந்த நேரத்தில் அல்லாஹ் தங்களுக்கு அருளிய சத்திய (மார்க்க)த்தைக் கொண்டுவந்தான். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய இந்த சத்திய(மார்க்க)த்தின் மூலம் அல்லாஹ்வே (இந்த நகரத்தாரின்) அந்த முடிவை நிராகரித்துவிட்டதைக் கண்ட அவர் ஆத்திரப்பட்டார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்துவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப இணைவைப்பாளர்களையும் வேதக்காரர்களையும் மன்னித்துவிடுபவர்களாகவும், (அவர்களின்) தொல்லைகளைச் சகித்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) உங்களுடைய செல்வங்களிலும் உங்களுடைய உயிர்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மேலும், உங்களுக்குமுன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைப்போரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் நீங்கள் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனை) அஞ்சினால் அதுதான் தீரச்செயலாகும்.(3:186) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறைநம்பிக்கை கொண்டதற்குப்பின் உங்களை இறைமறுப்பாளர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக்காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களின் உள்ளத்துள் எழுந்த பொறாமையினாலேயாம். ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும்வரை (அவர்களை) நீங்கள் மன்னித்து விட்டுவிடுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவன். (2:109) ‘அவர்களை மன்னித்து விட்டுவிட வேண்டும்’ என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அவர்கள் விஷயத்தில் (திட்டவட்டமான நடவடிக்கையெடுக்கும்படி) இறைவனிட மிருந்து தமக்கு ஆணை வரும்வரை அவர்களை மன்னித்து விட்டுவிட வேண்டும்’ என்பதையே விளக்கமாகக் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போர் புரிந்தபோது (அவர்களுடன் போரிட்ட) குறைஷித் தலைவர்களையும் இறைமறுப்பாளர்களின் தலைவர்களையும் பத்ரில் அல்லாஹ் அழித்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் வெற்றிவாகை சூடியவர்களாக, போர்ச் செல்வங்களைப் பெற்றவர்களாக (பத்ரிலிருந்து) திரும்பினார்கள். அவர்களுடன் குறைஷித் தலைவர்கள் மற்றும் இறைமறுப்பாளர்களின் தலைவர்கள் ஆகியோர் சிறைக்கைதிகளாக வந்தனர். அப்போது (அப்துல்லாஹ்) இப்னு உபை பின் சலூலும், அவருடன் இருந்த சிலை வழிபாட்டாளர்களான இணைவைப்பாளர்களும், “(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி அளித்துவிடுங்கள்” என்று கூறி, (வெளித்தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர்.236 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6207
- Book Index
- 231
Grades
- -