ஹதீஸ்கள்
#6148
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காக)ப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்றுகொண்டிருந்த போது மக்களிடையேயிருந்த ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம், “உங்கள் கவிதைகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடிக்காட்டக் கூடாதா?” என்று கேட்டடார். ஆமிர் (ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் (தமது வாகனத் திலிருந்து) இறங்கி மக்களுக்காகப் (பின்வரும் ஈரசைச்சீர் கவிதையைப்) பாடி அவர்களுடைய ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள். இறைவா!நீ இல்லையென்றால் நாங்கள்நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்.தர்மமும் செய்திருக்கமாட்டோம்.தொழுதிருக்கவுமாட்டோம். நாங்கள் புரிந்துவிட்டபாவங்களுக்காகஎங்களை மன்னிப்பாயாக.உனக்கே நாங்கள் அர்ப்பணம். (போர்முனையில் எதிரியை)நாங்கள் சந்திக்கும்போதுஎங்கள் பாதங்களைஉறுதிப்படுத்துவாயாக. எங்கள்மீது அமைதியைப்பொழிவாயாக. (அறவழியில் செல்ல)நாங்கள் அழைக்கப்பட்டால்நாங்கள் (தயாராக) வந்துவிடுவோம். எங்களிடம்மக்கள் (அபயக்) குரல்எழுப்பினால்(உதவிக்கு வருவோம்). என்று பாடிக்கொண்டிருந்தார்கள். (வழக்கம் போலப் பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடலாயின.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இந்த ஒட்டக வோட்டி?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆமிர் பின் அல்அக்வஉ” என்று பதிலளித்தனர். அப்போது, “அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இந்தப் பிரார்த்தனையின் பொருள் புரிந்த) ஒருவர், “இறைத்தூதரே! (ஆமிருக்கு வீரமரணமும் அதையடுத்து சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா?” என்று கேட்டார். பிறகு நாங்கள் கைபருக்கு வந்து கைபர்வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அதன் பிறகு (யூதர்களான) அவர்களுக்கெதிராக அல்லாஹ் (எங்களுக்கு) வெற்றியளித்தான். அவர்கள் வெற்றி கொள்ளப்பட்ட அன்றைய மாலை நேரத்தில் மக்கள் (ஆங்காங்கே) அதிகமாக நெருப்பு மூட்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது என்ன நெருப்பு? எதற்காக (இதை) மூட்டியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “இறைச்சி சமைப்பதற்காக” என்று மக்கள் பதிலளித்தனர். “என்ன இறைச்சி?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “நாட்டுக் கழுதைகளின் இறைச்சி” என்று மக்கள் கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றைக் கொட்டிவிட்டு அந்தப் பாத்திரங்களை உடைத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர், “இறைச்சிகளைக் கொட்டிவிட்டு அதன் பாத்திரங்களை நாங்கள் கழுவி (வைத்து)க்கொள்ளலாமா?” என்று கேட்டார். “அப்படியே ஆகட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்றபோது (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் (ரலி) அவர்களின் வாள் குட்டையானதாக இருந்தது. (அதனால்) அவர்கள் குனிந்து, ஒரு யூதனை வெட்டப்போனபோது அன்னாரது வாளின் மேற்பகுதி அன்னாரின் முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள். (கைபரை வென்று, மதீனா நோக்கி) மக்கள் திரும்பியபோது (நிகழ்ந்தவற்றை) சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (கவலையால்) நிறம் மாறிப்போயிருந்த என்னைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் அவர்களின் நற்செயல்கள் அழிந்துவிட்டன. (அவர் தமது வாளால் தம்மைத் தாமே குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்) என மக்கள் கூறுகிறார்கள்” என்று சொன்னேன். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள், “யார் இதைச் சொன்னவர்?” என்று கேட்டார்கள். “இதை இன்னாரும் இன்னாரும் இன்னாரும் உசைத் பின் ஹுளைர் அல்அன்சாரி அவர்களும் கூறினர்” என்றேன். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதைக் கூறியவர் உண்மைக்குப் புறம்பாகக் கூறிவிட்டார். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போரில் பங்குகொண்ட நன்மையென) இரண்டு நன்மைகள் உண்டு” என்று கூறியவாறு தம்மிரு விரல்களையும் அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். (தொடர்ந்து) “அவர் துன்பங்களைத் தாங்கினார். (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்த) இவரைப் போன்ற அரபியர் பூமியில் பிறப்பது அரிது” என்று சொன்னார்கள்.167 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6148
- Book Index
- 174
Grades
- -