ஹதீஸ்கள்
#6143
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களும் சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களும் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (பேரீச்சம்பழம் கொள்முதல் செய்வதற்காகச் சென்ற தம் தோழர்களைத் தேடி) கைபருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பேரீச்சந்தோப்புக்குள் பிரிந்துவிட்டனர். பின்னர் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள்.159 ஆகவே, (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி), முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (கொல்லப்பட்ட) தங்கள் நண்பரைக் குறித்துப் பேசினார்கள். அப்போது அப்துர் ரஹ்மானே (பேச்சைத்) தொடங்கினார். அவர் அந்த மூவரில் வயதில் சிறியவராக இருந்தார். எனவே நபி (ஸல்) அவர்கள், “(வயதில்) மூத்தவரை முதலில் பேசவிடு” என்றார்கள். -யஹ்யா பின் சயீத் அல்அன்சாரி (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “வயதில் பெரியவர், பேசும் பொறுப்பை ஏற்கட்டும்” என்று இடம்பெற்றுள்ளது. ஆகவே, (வயதில் மூத்தவர்களான) ஹுவய்யிஸாவும் முஹய்யிஸாவும் (கொல்லப்பட்ட) தம் நண்பர் குறித்துப் பேசினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(யூதர்களே கொலை செய்தார்கள் என்று) உங்களில் ஐம்பது பேர் சத்தியம் (கஸாமத்) செய்வதன் மூலம் ‘உங்களில் கொல்லப்பட்டவர்’ அல்லது ‘உங்கள் நண்பரின்’ உயிரீட்டுத் தொகையை நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் கண்ணால் காணாத விஷயமாயிற்றே! (எவ்வாறு நாங்கள் சத்தியம் செய்வது?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால், (பிரதிவாதிகளான) யூதர்களில் ஐம்பது பேர் (தாங்கள் கொலை செய்யவில்லை என்று) சத்தியம் செய்து உங்களை(ச் சத்தியம் செய்வதிலிருந்து) விடுவிக்க வேண்டும்” என்று கூறினார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (யூதர்கள்) இறை மறுப்பாளர்களான கூட்டமாயிற்றே! (அவர்களின் சத்தியத்தை எப்படி ஏற்க முடியும்?)” என்று கேட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே (கொல்லப்பட்டவருக்கான உயிரீட்டுத் தொகையைக்) கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்குத் தம் சார்பாக வழங்கினார்கள்.160 (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (நபி (ஸல்) அவர்கள் ஈட்டுத்தொகை யாக வழங்கிய) அந்த ஒட்டகங்களில் ஒன்றை நான் கண்டேன். அது அந்த உறவினர்களின் ஒட்டகத் தொழுவத்திற்குள் நுழைந்தது. அது தனது காலால் என்னை உதைத்துவிட்டது. இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களுடன் (தாமும் அந்த ஒட்டகத்தைக் கண்டதாக) சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாகவே நான் எண்ணுகிறேன்” என்று இடம்பெற்றுள்ளது. புஷைர் பின் யஸார் (ரஹ்) அவர்களிடமிருந்து யஹ்யா (ரஹ்) அவர்கள் வழியாக வந்துள்ள மற்றோர் அறிவிப்பில் சஹ்ல் (ரலி) அவர்கள் மட்டும் இதை அறிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. (ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களைப் பற்றிக் கூறப்படவில்லை.) அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6143
- Book Index
- 169
Grades
- -