ஹதீஸ்கள்
#6140
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (மூன்றுபேர் கொண்ட) ஒரு குழுவினர் விருந்தினராக வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம், “உன் விருந்தினரைக் கவனித்துக்கொள். நான் நபி (ஸல்) அவர்களிடம் செல்கிறேன். நான் வருவதற்கு முன் அவர்களை விருந்துண்ணச் செய்து விடு” என்று கூறினார்கள். நான் சென்று, எங்களிடமிருந்த உணவை அவர்களிடம் கொண்டுவந்து, “உண்ணுங்கள்!” என்றேன். அதற்கு அவர்கள், “வீட்டுக்காரர் எங்கே?” என்று கேட்டனர். நான் அவர்களிடம், “நீங்கள் உண்ணுங்கள்” என்றேன். அவர்கள் “வீட்டுக்காரர் வராத வரை நாங்கள் சாப்பிடமாட்டோம்” என்று கூறினர். அதற்கு, “நான் அளிக்கும் விருந்தை ஏற்று உண்ணுங்கள். ஏனெனில், நீங்கள் உண்ணாத நிலையில் என் தந்தை வந்துவிட்டால் அவர்கள் நம்மைக் கண்டிப்பார்கள்” என்றேன். ஆனால், அவர்கள் (சாப்பிட) மறுத்துவிட்டார்கள். மேலும், அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்தால் என்மீது கோபப்படுவார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். என் தந்தை வந்தபோது நான் அவர்களிடமிருந்து விலகி (ஒளிந்து)கொண்டேன். அவர்கள் “(விருந்தாளிகளுக்கு) என்ன செய்தீர்கள்?” என (வீட்டாரிடம்) கேட்டார்கள். அவர்கள் நடந்ததைத் தெரிவித்தார்கள். அப்போது என் தந்தை, “அப்துர் ரஹ்மானே!” என்று கூப்பிட்டார்கள். நான் (பயத்தால் பதிலளிக்காமல்) மௌனமாயிருந்தேன். பிறகு “அப்துர் ரஹ்மானே!” என்று (மீண்டும்) கூப்பிட்டார்கள். நான் (அப்போதும்) மௌனமாயிருந்தேன். பிறகு (மூன்றாம் முறை) “அறிவில்லாதவனே! உன் (இறைவன்)மீது சத்தியம் செய்கிறேன். என் குரல் உனக்குக் கேட்குமானால் நீ வந்தாக வேண்டும்” என்றார்கள். உடனே நான் வெளியே வந்தேன். “தங்கள் விருந்தினரிடமே கேளுங்கள்” என்றேன். அப்போது விருந்தினர், “அவர் எங்க ளிடம் உணவைக் கொண்டுவந்தார். (நாங்கள்தான் ஏற்றுக்கொள்ளவில்லை)” என்றனர். என் தந்தை, “என்னைத்தானே எதிர்பார்த்தீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வளவு தாமதத்திற்குக் காரணமாகிவிட்ட) நான் இன்றிரவு சாப்பிடப்போவதில்லை” என்றார்கள். மற்றவர்களோ “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சாப்பிடாத வரை நாங்களும் சாப்பிடமாட்டோம்” என்று கூறினர். அபூபக்ர் (ரலி) அவர்கள் “இன்றிரவைப் போன்று ஒரு தர்மசங்கடமான இரவை நான் கண்டதில்லை” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு என்ன கேடு! எங்கள் விருந்தை ஏன் நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள்? (அப்துர் ரஹ்மானே!) உன் உணவைக் கொண்டுவா!” என்றார்கள். நான் கொண்டுவந்தேன். அதில் என் தந்தை தமது கையை வைத்து “அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பம்). (நான் உண்ணமாட்டேன் எனச் சத்தியம் செய்த) முதல் நிலை ஷைத்தானால் விளைந்தது” என்றார்கள். பிறகு அவர்களும் சாப்பிட்டார்கள். விருந்தினரும் சாப்பிட்டனர்.156 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6140
- Book Index
- 167
Grades
- -