ஹதீஸ்கள்
#6093
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாளில்) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது (கிராமவாசி) ஒருவர் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) மழை பொய்த்துவிட்டது. (எங்களுக்கு) மழை வேண்டி உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வானத்தை (அண்ணாந்து) பார்த்தார்கள். (அதில் மழை) மேகம் ஏதும் இருக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். உடனே மேகம் ஒன்றோடொன்று திரள ஆரம்பித்தது. பிறகு மழை பொழிந்தது. இதையடுத்து மதீனாவின் நீர்வழிகள் (எல்லாம் நிரம்பி) வழிந்தோடின. இடையறாமல் அடுத்த ஜுமுஆவரை அம்மழை நீடித்தது. பிறகு ‘அந்த மனிதர்’ அல்லது ‘வேறொரு மனிதர்’ எழுந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆ) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அவர், “(தொடர்) மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களைவிட்டு மழையை நிறுத்துமாறு உங்கள் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! எங்கள் சுற்றுப்புறங்களில் (உள்ள மானாவாரி நிலங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றுக்கு இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!” என்று இரண்டு அல்லது மூன்று முறை பிரார்த்தித்தார்கள். அந்த(த் திரண்ட) மேகம் மதீனாவிலிருந்து (விலகி) வலப் பக்கமாகவும் இடப் பக்கமாகவும் பிரிந்து சென்றது. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது; ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தன்னுடைய தூதரின் மதிப்பையும் அவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் அல்லாஹ் மக்களுக்கு (நேரடியாகக்) காட்டினான்.111 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6093
- Book Index
- 120
Grades
- -