ஹதீஸ்கள்
#5807
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்காவிலிருந்த) முஸ்லிம்களில் சிலர் அபிசீனியாவுக்குப் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்ய ஆயத்தமானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘சற்று பொறுங்கள். ஏனெனில், எனக்கு (இறைவனிடமிருந்து) அனுமதி வழங்கப்படுவதை எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அனுமதியை(த்தான்) எதிர்பார்க்கின்றீர்களா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஹிஜ்ரத் செய்ய வேண்டுமென்பதற்காகத் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டார்கள். மேலும், (இந்தப் பயணத்திற்காகவே) தம்மிடம் இருந்த இரு ஊர்தி ஒட்டகங்களுக்கு நான்கு மாதம் கருவேலந்தழையைத் தீனியாகப் போட்டு (வளர்த்து) வந்தார் கள். (தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் ஒருமுறை நண்பகல் நேரத்தின் மத்தியில் எங்கள் வீட்டில் அமர்ந்துகொண்டிந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘‘இதோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையில் முக்காடிட்டபடி நம்மை நோக்கி-நம்மிடம் வருகை தந்திராத நேரத்தில்-வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று ஒருவர் கூறினார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களை ஏதோ ஒரு (முக்கியமான) விஷயம்தான் இந்த நேரத்தில் இங்கே வரச்செய்திருக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டார்கள். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி வழங்க அவர்களும் உள்ளே வந்தார்கள். உள்ளே நுழையும்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களிடம் இருப்பவர்களை வெளியே அனுப்புங்கள்” என்று சொல்ல, அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘இங்கிருப்பவர்கள் உங்கள் (துணைவி யாருடைய) குடும்பத்தார்தான். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு (ஹிஜ்ரத்) புறப்பட அனுமதியளிக்கப்பட்டு விட்டது” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியென்றால் தங்களுடன் நானும் வர விரும்புகிறேன். என் தந்தை தங்களுக்கு அர்ப்பண மாகட்டும்; அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்ல, நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி” என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட் டும். இந்த என் இரு ஊர்தி ஒட்டகங்களில் ஒன்றைத் தாங்கள் எடுத்துக்கொள்ளுங் கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்” என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அவர்கள் இருவருக்காகவும் வேண்டிப் பயண ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்து முடித்தோம். இருவருக்கும் ஒரு தோல் பையில் பயண உணவை வைத்தோம். (என் சகோதரி) அஸ்மா பின்த் அபீபக்ர் தன் இடுப்புக் கச்சிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அந்தத் தோல்பையின் வாயில் வைத்துக் கட்டினார். இதனால்தான் ‘இரு கச்சுடையாள்’ (‘தாத்துந் நிதாக்கைன்’) என்று அவர் பெயர் சூட்டப்பட்டார். பிறகு நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் ‘ஸவ்ர்’ எனும் மலையிலுள்ள ஒரு குகையை அடைந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் மூன்று இரவுகள் தங்கினார்கள். அவர்களுடன் (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ரும் இரவில் தங்கியிருப்பார். அப்துல்லாஹ் சமயோசித அறிவு படைத்த, புத்திக்கூர்மையுள்ள இளைஞராக இருந்தார். அவர் அவ்விருவரிடமிருந்தும் (வைகறைக்கு முந்திய) ‘ஸஹர்’ நேரத்தில் (விடைபெற்றுப்) புறப்பட்டுவிடுவார். இரவு (மக்காவில்) தங்கியிருந்தவரைப் போன்று குறைஷியருடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவருக்கெதிரான (குறைஷியரின்) சூழ்ச்சிகள் எதுவாயினும் அதைக் கேட்டு நினைவில் இருத்திக்கொண்டு இருள் கலக்கும் நேரத்தில் அவர்களிடம் அதைக் கொண்டுசெல்வார். அவர்கள் இருவருக்காகவும் பாலை அன்பளிப்பாகக் கறந்துகொள்ள இரவல் கொடுக்கப்பட்ட ஆடொன்றை அபூபக்ர் (ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமையான ஆமிர் பின் ஃபுஹைரா அவர்கள் மேய்த்துவந்தார்கள். அவர் இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதை அவர்கள் இருவரிடமும் ஓட்டிவருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழிப்பார்கள். அந்த ஆட்டை ஆமிர் பின் ஃபுஹைரா இரவின் இருள் இருக்கும் போதே விரட்டிச் சென்றுவிடுவார். இவ்வாறு (அவ்விருவரும் அக்குகையில் தங்கியிருந்த) மூன்று இரவு களில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார்.28 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5807
- Book Index
- 25
Grades
- -