ஹதீஸ்கள்
#5550
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாம் நாள் மக்காவில் ஆற்றிய உரையில்), ‘‘வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல் ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதா (அல்ஆகிரா)வுக்கும் ‘அபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ‘முளர்’ குலத்தாரின் ரஜப் மாதமாகும்” என்று கூறிவிட்டு, ‘‘இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். நாங்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று பதிலளித்தோம். அம்மாதத்திற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, ‘‘இது துல்ஹிஜ்ஜா மாதம் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள், ‘‘ஆம்” என்று சொன்னோம். ‘‘இது எந்த நகரம்?” என்றும் கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று சொன்னோம். அப்போதும் அவர்கள் இந்நகரத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு ‘‘இது (புனித) நகரமல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள், ‘‘ஆம்” என்றோம். அடுத்து ‘‘இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அப்போதும் அந்த நாளுக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணும் அளவுக்கு அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு, ‘‘இது ‘குர்பானி கொடுக்கும்’ (நஹ்ருடைய) நாளல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்றோம். (பின்னர் பின்வருமாறு) கூறினார்கள்: உங்களின் இந்த(ப் புனித) மாதத்தில், உங்களின் இந்த(ப் புனித) நகரத்தில், உங்களின் இந்த நாள் புனிதம் பெற்றிருப்பதைப் போன்றே உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியனவும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் வினைகள் குறித்து விசாரிப்பான். அறிந்துகொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்கின்ற வழிதவறியவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள். இதோ இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (என் கட்டளைகளை)த் தெரிவித்து விடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தியை (நேரடியாக)க் கேட்டவரைவிட அவர் யாரிடம் தெரிவிக்கிறாரோ அவர்களில் சிலர் இதை நன்கு காப்பவராயிருக்கலாம். -(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, ‘‘நபி (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள்” என்று கூறுவார்கள்.- பிறகு ‘‘நான் தெரிவித்துவிட்டேனா? நான் தெரிவித்துவிட்டேனா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.10 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5550
- Book Index
- 6
Grades
- -