ஹதீஸ்கள்
#5543
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(அல்லாஹ்வின் தூதரே! நாம் உணவுக்காக ஒட்டகங்களை அறுக்க நம் வாட்களை இன்று பயன்படுத்திவிட்டால், அவற்றின் கூர் மழுங்கி) நாளை நம்மிடம் (கூரான) வாட்களே இல்லாத நிலையில் எதிரியைச் சந்திக்க வேண்டிவருமே” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தைச் சிந்தச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருந்தால் (அதை) உண்ணுங்கள். ஆனால், அது பல்லாலோ நகத்தாலோ மட்டும் அறுக்கப்பட்டிருக்கக் கூடாது. அது (ஏன் கூடாது என்பது) பற்றி இதோ நான் உங்களுக்குக் கூறுகிறேன்: பல்லோ எலும்பாகும்; நகமோ அபிசீனியர்களின் கத்தியாகும்” என்று பதிலளித்தார்கள். மக்களில் அவசரப்பட்ட சிலர் (வேகமாக) முந்திச்சென்று போர்ச் செல்வங்களை எடுத்துக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களோ மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். (போர்ச் செல்வமாகக் கிடைத்த பிராணிகளைப் பெற்ற) அந்த மக்கள் சமையல் பாத்திரங்களை (அடுப்புகளின் மீது) வைத்து (சமைக்கத் தொடங்கி) விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (பங்கிட்டுத் தருவதற்கு முன்பே இப்படி அவர்கள் செய்ததால்) அந்தப் பாத்திரங்களைக் கவிழ்த்து (அவற்றில் இருப்பவற்றைக் கொட்டி)விடும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன. (பின்னர்) நபி (ஸல்) அவர்கள் மக்களி டையே (அச்செல்வங்களை) பங்கிட்டார்கள். அப்போது ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகளைச் சமமாக்கினார்கள். பிறகு (பங்குவைக்கப்பட்ட) ஒட்டகம் ஒன்று முன்வரிசையிலிருந்த மக்களிடையே இருந்து வெருண்டோடியது. அவர்களிடம் அப்போது (அதைப் பிடித்து வர) குதிரை எதுவும் இருக்கவில்லை. அப்போது ஒரு மனிதர் அதை நோக்கி ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அதைத் தடுத்து நிறுத்திவிட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘வன விலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே, இந்தப் பிராணிகளிடையேயும் கட்டுக்கடங்காதவை உள்ளன. ஆகவே, இவற்றில் இப்படிக் கட்டுக்கடங்காமல் வெருண்டோடும் பிராணியை இதைப் போன்றே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.56 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5543
- Book Index
- 68
Grades
- -