ஹதீஸ்கள்
#5492
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் மக்கா வுக்கும் மதீனாவுக்குமிடையே (‘அல்காஹா’ எனுமிடத்தில்) இருந்தேன். அப்போது மக்கள் (உம்ராவுக்காக) ‘இஹ்ராம்’ கட்டியிருந்தார்கள். நான் ‘இஹ்ராம்’ கட்டாமல் குதிரைமீது (பயணம் செய்து கொண்டு) இருந்தேன். நான் அதிகமாக மலையேறுபவனாக இருந்தேன். இந்நிலையில் மக்கள் ஆவலுடன் எதையோ பார்ப்பதைக் கண்டேன். நானும் கூர்ந்து கவனிக்கலானேன். அப்போது அங்கு ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. நான் மக்களிடம், ‘‘என்ன இது?” என்று கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்த காரணத்தால்) ‘‘எங்களுக்குத் தெரியாது” என்றனர். நான், ‘‘இது ஒரு காட்டுக் கழுதை” என்று சொன்னேன். அப்போது மக்கள், ‘‘நீங்கள் பார்த்தது அதுதான்” என்று கூறினார்கள். நான் என்னுடைய சாட்டையை மறந்துவிட்டிருந்தேன். ஆகவே, அவர்களிடம் ‘‘என் சாட்டையை எடுத்து என்னிடம் கொடுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் உங்களுக்கு இந்த விஷயத்தில் உதவமாட்டோம்” என்றனர். உடனே நானே இறங்கி அதை எடுத்தேன். பிறகு காட்டுக் கழுதையைப் பின்தொடர்ந்து சென்று தாக்கினேன். சிறிது நேரத்திற்குள் அதன் கால் நரம்புகளை வெட்டி (வீழ்த்தி)விட்டேன். பிறகு மக்களிடம் சென்று, ‘‘(இப்போது) எழுந்து, கழுதையை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அதைத் தொட மாட்டோம்” என்று கூறினர். ஆகவே, நானே அதைச் சுமந்து அவர்களிடம் கொண்டுசென்றேன். அவர்களில் சிலர் (அதை உண்ண) மறுத்துவிட்டனர். வேறு சிலர் உண்டனர். நான் ‘‘உங்களுக்காக நபி (ஸல்) அவர்களிடம் (இதன் சட்டம் என்ன என்று) கேட்டுத் தெரிந்து வருகிறேன்” என்று சொன்னேன். பிறகு நபி (ஸல்) அவர்களைச் சென்றடைந்து செய்தியை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம், ‘‘அதிலிருந்து உங்களிடம் ஏதேனும் எஞ்சியுள்ளதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம் (எஞ்சியுள்ளது)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘‘உண்ணுங்கள்; அது அல்லாஹ் உங்களுக்கு உண்ணக்கொடுத்த உணவாகும்” என்று சொன்னார்கள்.14 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5492
- Book Index
- 18
Grades
- -