ஹதீஸ்கள்
#5443
ஸஹீஹ் அல்-புகாரீ - Food, Meals
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் என் பேரீச்சம்பழங்களுக்காக, அவை இறக்கப்படும் (நாள்)வரை (எனக் கால வரம்பிட்டு) எனக்குக் கடன் கொடுத் திருந்தார். ‘ரூமா’ கிணற்றுச் சாலையிலிருந்த நிலம் எனக்குச் சொந்தமாயிருந்தது. அது விளைச்சல் தரவில்லை. ஆகவே, கடன் ஓர் ஆண்டு தள்ளிப்போனது. அந்த யூதர் அறுவடை வேளையில் என்னிடம் (கடனைத் திருப்பிக் கேட்டு) வந்தார். (ஆனால்,) அந்த நிலத்திலிருந்து நான் எதையும் (அந்த ஆண்டு) அறுவடை செய்யவில்லை. ஆகவே, நான் அவரிடம் அடுத்த ஆண்டுவரை அவகாசம் தரும்படி கேட்கலானேன். அவர் மறுக்கலானார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தம் தோழர்களிடம் ‘‘புறப்படுங்கள்; நாம் ஜாபிருக்காக அந்த யூதரிடம் அவகாசம் கேட்போம்” என்று சென்னார்கள். நான் எனது பேரீச்சந்தோப்பில் இருந்தபோது அவர்கள் (அனைவரும்) என்னிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரிடம் பேசத் தொடங்க, அவர், ‘‘அபுல் காசிமே! நான் அவருக்கு அவகாசம் அளிக்க மாட்டேன்” என்று கூறலானார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் எழுந்து பேரீச்சமரங்களுக்கு இடையே சுற்றி வந்தார்கள்; பிறகு, அந்த யூதரிடம் சென்று மீண்டும் பேசலானார்கள். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். பிறகு, நான் எழுந்து செங்காய்கள் சிலவற்றைக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்கள்முன் வைத்தேன். அவர்கள் (அதை) உண்டார்கள். பிறகு ‘‘(நீ ஓய்வெடுக்கும்) பந்தல் எங்கே, ஜாபிர்?” என்று கேட்டார்கள். நான் அதைக் காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘எனக்கு அங்கே படுக்கை தயார் செய்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவர்களுக்குப் படுக்கை விரித்துக் கொடுத்தேன். அவர்கள் (அதனுள்) சென்று உறங்கிப் பிறகு விழித்தார்கள். இன்னொரு கைப்பிடி (செங்காய்களை) அவர்களிடம் கொண்டுவந்து கொடுத்தேன். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு எழுந்து அந்த யூதரிடம் (மீண்டும்) பேசினார்கள். அவர் அதற்கும் (உடன்பட) மறுத்துவிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் முறையாக செங்காய்கள் கொண்ட பேரீச்சம் மரங்களுக்கிடையே நின்றார்கள். பிறகு ‘‘ஜாபிரே! (பழத்தைப்) பறித்து (உமது கடனை) அடைப்பாயாக!” என்று சொன்னார்கள். அவர்கள் பறிக்குமிடத்தில் நிற்க, நான் (எனது கடனை) அடைக்கும் அளவுக்கு மரத்திலிருந்து (பழங்களைப்) பறித்தேன். (பிறகும்) பழம் மீதியிருந்தது. நான் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நானே சாட்சியம் அளிக்கின்றேன்” என்று சொன்னார்கள். (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அரீஷ்’ (பந்தல்) மற்றும் ‘அர்ஷ்’ ஆகிய சொற்களுக்கு ‘கட்டடம்’ என்பது பொருள். ‘‘(இச்சொல்லில் இருந்து பிறந்த) ‘மஅரூஷாத்’ எனும் சொல்லுக்கு ‘திராட்சை முதலியவற்றின் பந்தல்’ என்பது பொருள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (குர்ஆனில் 2:259ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள) ‘உரூஷிஹா’ என்பதற்கு ‘அக்கிராமத்தின் கட்டடங்கள்’ எனப் பொருள் கூறப்படுகிறது. இந்த ஹதீஸில் ‘ஓராண்டு தள்ளிப்போனது’ என்பதைக் குறிக்க ‘கலா ஆமன்’ எனும் வாக்கியம் இடம்பெறுகிறது. இது என்னிடம் சரியானதாக இல்லை. ‘ஜல்லா’ என்றிருந்தால், அதில் ஐயமில்லை. இவ்வாறு புகாரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Food, Meals
- Hadith Index
- #5443
- Book Index
- 72
Grades
- -