ஹதீஸ்கள்
#5381
ஸஹீஹ் அல்-புகாரீ - Food, Meals
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ஸைத் அல்அன்சாரீ-ரலி) அவர்கள் தம் துணைவியார் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், ‘‘நான் நபி (ஸல்) அவர்களுடைய குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். ஆகவே, உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வந்தார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்கள் தமது முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் ரொட்டியைச் சுருட்டி எனது கை (அக்குளு)க்குக் கீழே மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாக ஆக்கினார்கள். பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டுசென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன்னால் (போய்) நின்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன். ‘‘உணவுடனா அனுப்பியுள்ளார்?” என்று அவர்கள் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர் களிடம், ‘‘எழுந்திருங்கள்” என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் வந்(து விவரத்தைத் தெரிவித்)தேன். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்) ‘‘உம்மு சுலைமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உணவளிக்க நம்மிடம் உணவு இல்லையே!” என்று சொன்னார்கள். (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தாமே நபி (ஸல்) அவர்களை முன்சென்று வரவேற்பதற்காகப்) போய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அபூதல்ஹா அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!” என்று சொன்னார்கள். உடனே உம்மு சுலைம் அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் துண்டுதுண்டாகப் பிய்க்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைச் சொன்னார்கள். பிறகு ‘‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியளியுங்கள்” என்று (அபூதல்ஹாவிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதியளித்தார்கள். அப்போது அவர்கள் (பத்துப் பேரும்) வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி அளியுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதியளிக்க, அவர்களும் வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு ‘‘மேலும் பத்துப் பேருக்கு அனுமதியளியுங்கள்” என்று கூற, அபூதல்ஹாவும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டு வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும்வரை உண்டார்கள். (அப்படி உண்ட) அந்த மக்கள் எண்பது பேர் ஆவர்.11 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Food, Meals
- Hadith Index
- #5381
- Book Index
- 9
Grades
- -