ஹதீஸ்கள்
#5052
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பாரம்பரியமிக்க ஒரு பெண்ணை என் தந்தை எனக்கு மணமுடித்துவைத்தார்கள். (என் தந்தை) அம்ர் (ரலி) அவர்கள் தம் மருமகளை அணுகி அவளுடைய கணவர் குறித்துக் கேட்பது (அதாவது என்னைப் பற்றி விசாரிப்பது) வழக்கம். அப்போது அவள், ‘‘அவர் நல்ல மனிதர்தான்; (ஆனால்,) அவர் படுக்கைக்கு வரவுமில்லை; அவரிடம் நான் வந்து சேர்ந்தது முதல் எனக்காகத் திரைச் சீலையை அவர் இழுத்து மூடவுமில்லை” என்று சொல்வாள். இதே நிலை நீடித்தபோது, (என் தந்தை) அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (இதைப் பற்றிக்) கூறினார்கள். அப்போது, ‘‘என்னை வந்து சந்திக்குமாறு உங்கள் மகனிடம் சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், ‘‘நீ எப்படி நோன்பு நோற்கிறாய்?” என்று கேட்டார்கள். நான், ‘‘தினந்தோறும் நோன்பு நோற்கிறேன்” என்று சொன்னேன். (‘‘குர்ஆனை) எப்படி ஓதி முடிக்கிறாய்” என்று கேட்டார்கள். நான், ‘‘ஒவ்வோர் இரவிலும் (குர்ஆனை ஓதி முடிக்கிறேன்)” என்று சொன்னேன். அவர்கள், ‘‘மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். குர்ஆனை ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை முழுமையாக) ஓதிக்கொள்” என்று சொன்னார்கள். ‘‘நான் அதைவிட அதிகமாக (நோன்பு நோற்கச்) சக்தி பெற்றுள்ளேன்” என்று கூறினேன். அவர்கள் ‘‘வாரத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள்” என்றார்கள். நான், ‘‘அதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) எனக்குச் சக்தி உண்டு” என்று கூறினேன். ‘‘இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிட்டு, ஒரு நாள் நோற்றுக்கொள்!” என்று சொன்னார்கள். நான், ‘‘இதைவிடவும் அதிகமாக (நோன்பு நோற்கச்) சக்தி பெற்றுள்ளேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் உயர்ந்த நோன்பு வழக்கப்படி, ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்றுக்கொள்! மேலும், ஒவ்வோர் ஏழு இரவுகளிலும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி (முடித்து)க்கொள்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய இந்தச் சலுகையை நான் ஏற்று நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்! காரணம் நான் (இப்போது) தள்ளாமை வயதையடைந்து மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன். (அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் (தமது முதுமையில்) குர்ஆனில் ஏழில் ஒரு பாகத்தை (அதாவது ஒரு மன்ஸிலை) தம் வீட்டாரில் சிலரிடம் பகலில் ஓதிக்காட்டுவார்கள். (இரவில்) ஓதவேண்டுமென அவர்கள் விரும்பிய பாகத்தையே (இவ்வாறு) பகலில் ஓதிக்காட்டுவார்கள். இரவில் (ஓதும்போது) சுலபமாக இருக்கட்டும் என்பதே இதற்குக் காரணம். அன்னார் (நோன்பு நோற்கச்) சக்தி பெறவேண்டும் என விரும்பும்போது, பல நாட்கள் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு அந்நாட்களைக் கணக்கில் வைத்துக்கொள்வார்கள். பிறகு (வசதிப்படும் போது) அதே அளவு நாட்கள் நோன்பு நோற்பார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்தபோது (நபியவர்கள் இறந்தபோது) தாம் செய்துவந்த எந்த வழிபாட்டையும் கைவிடுவதை அன்னார் விரும்பாததே இதற்குக் காரணம். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம், ‘‘மாதம் ஒருமுறை குர்ஆனை ஓதி நிறைவு செய்” என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அதைவிட அதிகமாக ஓதுவதற்குத் தம்மால் முடியும் என அன்னார் தெரிவிக்க, நபியவர்கள் நாட்களைக் குறைத்துக்கொண்டே வந்து) மூன்று நாட்களுக்கு ஒருமுறை, அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை (குர்ஆனை ஓதி நிறைவு செய் என்று நபியவர்கள் கூறினார்கள்) என அறிவிப்பாளர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். ‘ஏழு நாட்களுக்கு ஒருமுறை’ என்றே பெரும்பாலோர் கூறியுள்ளனர். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #5052
- Book Index
- 77
Grades
- -