ஹதீஸ்கள்
#5018
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) ‘அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். எனது குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே நான் ஓதுவதை நிறுத்திக்கொண்டேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன்பு போலவே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன்.குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காண முடியவில்லை. காலை நேரமானபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம், ‘‘இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)” என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன், அல்லாஹ்வின் தூதரே! அவன் அதன் அருகில் இருந்தான். ஆகவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நோக்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளியே வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது என்ன வென்று நீ அறிவாயா?” என்று கேட்டார்கள். நான், ‘‘இல்லை (தெரியாது)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் குரலைக் கேட்டு நெருங்கிவந்த வானவர்கள்தான் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள்; மக்களைவிட்டு அது மறைந்திருக்காது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் தமக்குக் கிடைத்துள்ளதாக அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னுல் ஹாதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #5018
- Book Index
- 40
Grades
- -