ஹதீஸ்கள்
#4929
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே!) இந்த வஹியை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டுவரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் நாவையும் இரு உதடுகளையும் (எங்கே மறந்துவிடப்போகிறதோ என்ற அச்சத்தால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக்கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களது வதனத்திலேயே காணப்படலாயிற்று. ஆகவே அல்லாஹ், ‘‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா” என்று தொடங்கும் (75ஆவது அத்தியாயத்திலுள்ள) ‘‘இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர். அதை (உமது மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீர்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” எனும் (75:16,17) வசனங்களை அருளினான். அதாவது, ‘உமது நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உமது நாவால் ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும்’ என்று இறைவன் கூறினான். மேலும், ‘‘நாம் இதை ஓதிவிட்டோமாயின், நீர் ஓதுவதைத் தொடர்வீராக!” என்ற (75:18ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது ‘நாம் (வானவர் மூலம்) அருளும்போது, அதைக் கவனத்துடன் கேட்பீராக!’ என்று கூறினான். ‘‘பின்னர், அதை விளக்குவதும் எமது பொறுப்பாகும்” எனும் (75:19ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘உமது நாவால் அதை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உம்மை (ஆயத்தம்) செய்வது நமது பொறுப்பாகும்’ என்று கூறினான். (இந்த இறைவசனங்கள் அருளப்பட்ட பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (‘வஹீ’ கொண்டுவரும்போது,) தலையைத் தாழ்த்தி (அருளப்படுவதை நபி (ஸல்) அவர்கள் மௌனத்துடன் கேட்டு)க்கொண்டிருப்பார்கள். (இறைவசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்றுவிடும்போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள். ‘‘(மனிதனே! இது) உனக்குக் கேடுதான்! கேடேதான்” எனும் (75:34ஆவது) வசனம் ஓர் எச்சரிக்கையாகும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4929
- Book Index
- 449
Grades
- -