ஹதீஸ்கள்
#4890
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரை வீரர்களான) என்னையும், ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களையும், மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களையும் ‘‘நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ எனும் இடம்வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் பெண்ணொருத்தி இருக்கிறாள். (மக்காவிலுள்ள விரோதிகளுக்கு ‘ஹாத்திப் பின் அபீபல்த்தஆ’ நமது இரகசியத் திட்டங்களை எழுதித் தெரிவித்துள்ள) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். அதை அவளிடமிருந்து கைப்பற்றி வாருங்கள்!” என்று கூறியனுப்பினார்கள். உடனே நாங்கள் (புறப்பட்டுச்) சென்றோம். எங்களைச் சுமந்துகொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தன. நாங்கள் அந்த ‘ரவ்ளத்து காக்’ எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு ஒட்டகச் சிவிகையில் இருந்த அந்தப் பெண்ணைக் கண்டோம். (அவளிடம்) நாங்கள், ‘‘கடிதத்தை வெளியே எடு!” என்று சொன்னோம். அதற்கு அவள், ‘‘என்னிடம் கடிதம் ஏதுமில்லை” என்று பதிலளித்தாள். நாங்கள், ‘‘ஒன்று, நீயாகக் கடிதத்தை எடுத்து(க் கொடுத்து)விடு! இல்லையேல், (உன்னைச் சோதனையிடுவதற்காக உனது) ஆடையை நீ களைய வேண்டியிருக்கும்” என்று சொன்னோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றோம். அதில் ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருக்கக் கண்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஹாத்திபே! என்ன இது?” என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள் (தம் குற்றத்தை ஒப்புக்கொண்டு), ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்காமல் அவர்களிடையே (வசித்துவந்த) ஒருவனாகவே இருந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர் களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்காவில் உறவினர் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் (எவரும்) இல்லாததால், மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் (பிரதியுபகாரமாக) என் உறவினரைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் விரும்பினேன். (அதனால், அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாமைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்கோ இவ்விதம் செய்யவில்லை” என்று (காரணம்) கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் உங்களிடம் உண்மையே சொன்னார்” என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்; (சதி வேலைகள் செய்த) இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் பத்ர் போரில் கலந்துகொண்டார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பத்ர் போரில் பங்கேற்றவர்களிடம், ‘நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள்; உங்களை நான் மன்னித்துவிட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று சொன்னார்கள். ‘ஹாத்திப் பின் அபீபல்த்தஆ’ (ரலி) அவர்கள் விஷயத்தில்தான், ‘‘இறை நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர் களாயிருப்பவர்களை நீங்கள் நண்பர்களாக்கிக்கொள்ளாதீர்கள்” என்று தொடங்கும் (60:1ஆவது) வசனம் அருளப்பெற்றது என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இந்த இறைவசனம் (அலீ (ரலி) அவர்களின்) அறிவிப்பிலேயே உள்ளதா? அல்லது அம்ர் பின் தீனார் அவர்களின் (அறிவிப்பின்போது வந்த) சொல்லா என்பது எனக்குத் தெரியாது.2 ... அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘‘ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள் தொடர்பாகத்தான் இவ்வசனம் (60:1) அருளப்பெற்றதா?” என்று கேட்கப்பட்டது. சுஃப்யான் (ரஹ்) அவர்கள், ‘‘இப்படித்தான் மக்களின் அறிவிப்பு களில் காணப்படுகிறது. இந்த அறிவிப்பை நான் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிட மிருந்து செவியுற்றேன். அதில் ஒரு வார்த்தையைக்கூட நான் விட்டுவிடவில்லை. நான் அல்லாத வேறு யாரும் அம்ர் (ரஹ்) அவர்களிடமிருந்து இதை நன்கு நினைவில் நிறுத்திக்கொண்டதாக நான் கருதவில்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4890
- Book Index
- 410
Grades
- -