ஹதீஸ்கள்
#4670
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டபோது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்கு கஃபனிடுவதற்காக நபி (ஸல்) அவர்களின் மேலங்கியைக் கேட்டார்கள்.17 அவரிடம் நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று (அதாவது நயவஞ்சகருக்கு பாவமன்னிப்புக் கோர வேண்டாமென்று) உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப்போகிறீர்கள்!” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பாவன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் விருப்ப உரிமையளித்துள்ளான்” என்று கூறிவிட்டு, “(நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது கோராமல் இருப்பீராக! (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீர் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்” என்று கூறுகிறான். நான் எழுபது முறையைவிட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்” என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவர் நயவஞ்சகராயிற்றே!” என்று சொன்னார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், “அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் தொழுவிக்க வேண்டாம். அவருடைய மண்ணறை அருகேயும் நீர் நிற்க வேண்டாம்” எனும் (9:84ஆவது) வசனத்தை அருளினான்.18 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4670
- Book Index
- 192
Grades
- -