ஹதீஸ்கள்
#4585
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு “அல்ஹர்ரா' எனுமிடத்திலிருந்த கால்வாய் ஒன்றின் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஸுபைரே! (முதலில் உங்கள் தோப்புக்கு) நீங்கள் நீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருப்பவருக்குத் தண்ணீரை அனுப்புங்கள்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) அந்த அன்சாரி, “அல்லாஹ்வின் தூதரே! அவர் உங்கள் அத்தை (ஸஃபிய்யா பின்த் அப்தில் முத்தலிபின்) மகன் என்பதாலா (அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிறீர்கள்)?” என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தில் சிவந்து)விட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (ஸுபைர் (ரலி) அவர்களைப் பார்த்து), “ஸுபைரே! (உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு வரப்பு களைச் சென்றடையும்வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்துங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருக்கும் தோப்புக்காரருக்குத் தண்ணீரை விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள். அந்த அன்சாரித் தோழர் தம்மைக் கோபப்படுத்தியபோது நபி (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களின் உரிமையைத் தெளிவான தீர்ப்பின் மூலம் முழுமையாக வழங்கிவிட்டார்கள். அதற்குமுன் அவர்கள் இருவருக்குமே சகாயம் கிடைக்கும் வகையில் ஒரு தீர்ப்பைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின், “(நபியே!) உம்முடைய இறைவன்மீது சத்தியமாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட (சண்டை சச்சரவு முதலிய)வற்றில் உம்மை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு, பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்புக் குறித்துத் தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும் அதற்கு இணங்கி நடக்காத வரை அவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாகமாட்டார்கள்” எனும் (4:65ஆவது) வசனம் இது தொடர்பாக அருளப்பெற்றது என்றே நான் எண்ணுகிறேன்.17 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4585
- Book Index
- 107
Grades
- -