ஹதீஸ்கள்
#4566
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஃபதக்' நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ர் போருக்கு முன்னால் நடந்தது. -அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) “அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்' இருந்தார். -அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது.- அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வழிபாடு செய்யும் இணைவைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் கலந்து இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல்துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, “எங்கள்மீது புழுதி கிளப்பாதீர்” என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (நபி (ஸல்) அவர்களிடம்) “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இந்த) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச்சொல்லுங்கள்” என்றார். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “இல்லை; அல்லாஹ்வின் தூதரே! (இந்த) அவையிலேயே இதை எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்” என்றார். இதைக் கேட்ட முஸ்óம்களும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக்கொண்டேயிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறி சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் “சஅதே! அபூஹுபாப் - அப்துல்லாஹ் பின் உபை - சொன்னதை நீங்கள் கேள்விப்பட வில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார்” என்றார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். உங்களுக்கு வேதம் அருளிய (இறை)வன் மீதாணை யாக! இந்த (மதீனா) ஊர்வாசிகள் அவருக்கு முடிசூட்டித் தலைவராக்க முடிவு செய்திருந்த வேளையில், அல்லாஹ் உங்களுக்கு அருளிய சத்திய (வேத)த்தைக் கொண்டுவந்துவிட்டான். எனவே, அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய (மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் உங்களுக்கு முன்னால் அவ்வாறு அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக் கொப்ப இணைவைப்பாளர்களையும் வேதக்காரர்களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர்களின்) நிந்தனைகளைப் பொறுத்துக்கொள்பவர்களாகவும் இருந்தனர். அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்குமுன் வேதம் அருளப்பட்ட வர்களிடமிருந்தும் இணைவைப்போரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிó ருந்து விலகி நடந்தால், அதுதான் உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (3:186) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறைநம்பிக்கை கொண்டதற்குப்பின் உங்களை இறைமறுப்பாளர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக் காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகி விட்ட பின்னர் அவர்களின் உள்ளத்துள் எழுந்த பொறாமையினாலேயாம். ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும்வரை (அவர்களை) நீங்கள் மன்னியுங்கள். நிச்சயமாக! அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றல் உள்ளவன். (2:109) அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் (நடவடிக்கையெடுக்க) அனுமதிக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக்கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போருக்குச் சென்றபோது அன்னாரின் மூலம் அல்லாஹ் குறைஷி இறைமறுப்பாளர் களின் தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் அவருடனிருந்த இணை வைப்பாளர்களும், சிலை வழிபாடு செய்வோரும் “(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. ஆகவே, இந்த (இறை)த்தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதிமொழியளித்துவிடுங்கள்” என்று கூறி (வெளித் தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4566
- Book Index
- 88
Grades
- -