ஹதீஸ்கள்
#4391
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர் களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது கப்பாப் (ரலி) அவர்கள் வந்து, “அபூஅப்திர் ரஹ்மானே! நீங்கள் (குர்ஆன்) ஓதுவதைப் போல் இந்த இளைஞர்களால் ஓத முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால் உங்களுக்கு (குர்ஆன்) ஓதிக்காட்டும்படி இவர்களில் சிலருக்குக் கட்டளையிடுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு கப்பாப் (ரலி) அவர்கள், “சரி! (ஓதிக்காட்டச் சொல்லுங்கள்)” என்று சொன்னார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (என்னிடம்), “அல்கமா! நீங்கள் ஓதுங்கள்” என்று கூற, ஸியாத் பின் ஹுதைர் (ரஹ்) அவர்களுடைய சகோதரர் ஸைத் பின் ஹுதைர் (ரஹ்) அவர்கள், “அல்கமா, எங்களில் மிகச் சிறந்த ஓதுநராக இல்லாதிருக்க, அவரையா ஓதச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால் நபி (ஸல்) அவர்கள் உங்கள் குலத்தார் (பனூ அசத்) பற்றியும், அல்கமாவுடைய குலத்தார் (நகஉ) பற்றியும் கூறியதை உங்களுக்கு நான் அறிவிப்பேன்” என்று சொன்னார்கள். அப்போது நான் (குர்ஆனின் 19ஆவது) அத்தியாயம் “மர்யமி'லிருந்து ஐம்பது வசனங்களை ஓதினேன். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (கப்பாப் (ரலி) அவர்களை நோக்கி), “(இவரது ஓதல்) எப்படியிருப்பதாகக் கருதுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு அவர்கள், “நன்றாக ஓதினார்” என்று பதிலளித்தார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நான் எதை ஓதினாலும் அதை இவரும் ஓதிவிடுவார்” என்று சொன்னார்கள். பிறகு, கப்பாப் (ரலி) அவர்களின் பக்கம் திரும்பினார்கள். அப்போது அவர்கள் தங்க மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். ஆகவே, “இந்த மோதிரம் கழற்றி எறியப்படும் வேளை (இன்னும்) வரவில்லையா?” என்று கேட்டார்கள். கப்பாப் (ரலி) அவர்கள், “இன்றைக்குப் பிறகு இதை நான் அணிந்திருப்பதை ஒருபோதும் நீங்கள் பார்க்கமாட்டீர்கள்” என்று சொல்லிவிட்டு, அதைக் கழற்றி எறிந்துவிட்டார்கள்.428 இதே ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4391
- Book Index
- 414
Grades
- -