ஹதீஸ்கள்
#4323
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள், ஹுனைன் போரை முடித்துக்கொண்டு திரும்பிய போது, அபூஆமிர் (ரலி) அவர்களை (தளபதியாக்கி) “அவ்த்தாஸ்' பள்ளத்தாக்கிற்கு ஒரு படையை அனுப்பிவைத்தார்கள். அப்போது அபூஆமிர் அவர்கள் (கவிஞன்) “துரைத் பின் அஸ்ஸிம்மா'வைச் சந்தித்தார்கள். (அவர்கள் இருவருக்கு மிடையில் சண்டை நடந்தது. அதில்) துரைத் கொல்லப்பட்டான். அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூஆமிர் (ரலி) அவர்களுடன் என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூஆமிர் அவர்களின் முழங்காலில் அம்பு பாய்ந்தது. ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவனே அந்த அம்பை எய்து, அதை அவர்களது முழங்காலில் நிறுத்தினான். உடனே நான் அவர்களுக்கு அருகில் சென்று, “என் தந்தையின் சகோதரரே! உங்கள்மீது அம்பெய்தவன் யார்?” என்று கேட்டேன். “என்மீது அம்பெய்து என்னைக் கொன்றவன் இதோ!” என்று (அவனை நோக்கி) என்னிடம் சைகை காட்டினார்கள். நான் அவனை நோக்கிச் சென்று, அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். அவனைப் பின்தொடர்ந்து நானும் ஓடிக்கொண்டே, “(என்னைக் கண்டு ஓடுகிறாயே) உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்கமாட்டாயா?” என்று கேட்டேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக்கொண்டான். பிறகு நாங்கள் இருவரும் வாளால் மோதிக்கொண்டோம். அப்போது அவனை நான் கொன்றுவிட்டேன். பிறகு நான் அபூஆமிர் அவர்களிடம் (சென்று), “உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் (என் மூலம்) கொன்றுவிட்டான்” என்று கூறினேன். பிறகு, (“எனது முழங்காலில் பாய்ந்திருக்கும்) இந்த அம்பைப் பிடுங்கியெடு” என்று அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது. “என் சகோதரரின் மகனே! நபி (ஸல்) அவர்களுக்கு (என்) சலாம் கூறி, எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கேட்கும்படி கோரு” என்று அபூஆமிர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். பிறகு என்னைத் தம் பிரதிநிதியாக மக்களுக்கு நியமித்துவிட்டு, சிறிது நேரத்திற்குப்பின் அபூஆமிர் (ரலி) அவர்கள் (வீர)மரணமடைந்தார்கள். பிறகு (அங்கிருந்து) நான் திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தமது வீட்டில் (பேரீச்சம் நாரால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன்மீது விரிப்பு ஒன்று இருந்தது.352 (எனினும்) கட்டிலின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும், இரு விலாப் புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது. பிறகு அவர்களிடம் எங்கள் செய்தியையும் அபூஆமிர் அவர்களின் செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி அபூஆமிர் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்பது பற்றிக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரும்படி கூறி, அதில் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி, “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும்விட (தகுதியில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் நான் பார்த்தேன். உடனே நான், “எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள் (நபியே!)” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “இறைவா! அப்துல்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (நபி (ஸல்) அவர்கள் புரிந்த இரு பிரார்த்தனைகளில்) ஒன்று அபூஆமிர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்று அபூமூசா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4323
- Book Index
- 353
Grades
- -