ஹதீஸ்கள்
#4230
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப் பட்டுவிட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரு சகோதரர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூருஹ்ம் ஆவார். நான்தான் அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். -அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூபுர்தா ஆமிர் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “எனது (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்” என்றோ “ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம்” என்றோ (என் தந்தை அபூமூசா (ரலி) அவர்கள்) சொன்னார்கள்- நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனா நோக்கிப்) பயணித்தோம். எங்கள் கப்பல் (திசை மாறி) அபிசீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை (கொண்டுசென்று) இறக்கிவிட்டது. (அபிசீனியாவில்) ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். (ஏற்கெனவே அவர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்து, அவர் தம் சகாக்களுடன் அபிசீனியாவில் தங்கியிருந்தார்.) பிறகு (அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க) அவருடன் நாங்களும் தங்கினோம். இறுதியில், நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம்.279 அப்போது சிலர், கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, “உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்துவிட்டோம்” என்று கூறலாயினர். எங்களுடன் (மதீனாவிற்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள்.நஜாஷீ மன்னரை நோக்கி (அபீசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மா (ரலி) அவர்களும் ஒருவராவார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தம்முடைய மகள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களைக் கண்டபோது, “இவர் யார்?” என்று (தமது மகள் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம்) கேட்டார்கள். “(இவர்) அஸ்மா பின்த் உமைஸ்” என்று ஹஃப்ஸா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், “இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?” என்று கேட்டார்கள். அதற்கு, “ஆம்' என்று அஸ்மா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் வந்துவிட்டோம். ஆகவே, உங்களைவிட நாங்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்டு அஸ்மா (ரலி) அவர்கள் கோபப்பட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியாக நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்றுவந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலைவி லிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய “நாட்டில்' அல்லது “பூமியில்' இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்காமல் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறி, அவர்களிடம் (நியாயம்) கேட்கப்போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்லமாட்டேன்; திரித்துப் பேசவுமாட்டேன். நீங்கள் சொன்னதைவிடக் கூட்டிச் சொல்லவுமாட்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4230
- Book Index
- 268
Grades
- -