ஹதீஸ்கள்
#4203
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அன்றைய தினத்தின் போரை முடித்துக்கொண்டு) தம் படையினரிடமும், எதிர் அணியினர் தம் படையினரிடமும் திரும்பியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே (“குஸ்மான்' என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் இருந்தார். அவர், (யூதர்களின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலகி) தனியாகப் போரிட்ட எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தமது வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தார். அப்போது, “இன்றைய தினம் இன்ன மனிதர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தி செய்ததைப் போன்று வேறெவரும் நம்மில் தேவை தீரப் போரிடவில்லை” என்று (மக்களால்) பேசப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். அப்போது மக்களில் (அக்ஸம் பின் அபில்ஜவ்ன் என்ற) ஒருவர், “நான் (பின்தொடர்ந்து) அவருடன் செல்லப்போகிறேன்” என்று கூறினார். (அவ்வாறே) அந்த மனிதருடன் இவரும் புறப்பட்டார். அவர் நிற்கும்போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்து சென்றால் அவருடன் இவரும் விரைந்து சென்றார். அந்த (குஸ்மான் என்ற) மனிதர் (அப்போரில் ஒரு கட்டத்தில்) கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி தமது வாளை (அதன் கீழ் பகுதியைப்) பூமியில் வைத்து, அதன் கூரான மேல்பகுதியைத் தமது மார்புகளுக்கிடையில் வைத்து, பிறகு அந்த வாளின் மீது தமது உடலை அழுத்தித் தற்கொலை செய்துகொண்டார். (பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே நான், “அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு' என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடிப் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து சென்றேன்.) பிறகு அவர் மிகக் கடுமையாக (எதிரிகளால்) காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி, தமது வாளின் (கீழ்) முனையைப் பூமியில் (நட்டு)வைத்து அதன் மேல்முனையைத் தம் மார்புகளுக்கிடையில் வைத்துத் தம்மை அந்த வாளின் மீது அழுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துவருவார். ஆனால்,(உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்” என்று கூறினார்கள்.264 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4203
- Book Index
- 243
Grades
- -