ஹதீஸ்கள்
#4179
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகியஇருவரும்-ஒருவர் மற்றவரைவிடக் கூடுதலாகக்- கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “ஹுதைபியா' ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் குர்பானி பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அதற்கு அடையாளமும் இட்டார்கள். பின்னர் அங்கிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் “குஸாஆ' குலத்தாரில் (புஸ்ர் பின் சுஃப்யான் என்ற) ஒருவரை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். “ஃகதீருல் அஷ்தாத்' எனும் இடத்தில் நபியவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களின் உளவாளி வந்து, “குறைஷியர் உங்களைத் தாக்குவதற்காகப் பெரும் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்; பல்வேறு குலத்தாரை (ஓரிடத்தில்) ஒன்றுதிரட்டி வைத்துள்ளனர். அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் (கஅபாவிற்குச்) செல்ல(வோ, மக்காவிற்குள் நுழையவோ) விடாமல் தடுப்பார்கள்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மைத் தடுக்க நினைக்கும் இவர்களின் குடும்பத்தாரிடமும் சந்ததி களிடமும் நான் (போர் தொடுக்கச்) செல்ல வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நம்மிடம் அவர்கள் (போர் புரிய) வந்தால், (அதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் அனுப்பி வைத்த) உளவாளியை(யும்) அந்த இணைவைப்பாளர்களுக்குத் தெரியாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான்.240 அவ்வாறு அவர்கள் வராவிட்டால் அவர்களை நாம் இழப்புக்குள்ளாக்கிவிட்டுச் செல்வோம்.” என்று கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த இறையில்லத்தை நாடித்தானே நீங்கள் புறப்பட்டு வந்தீர்கள். யாரையும் கொல்லவோ எவரிடத்திலும் போரிடவோ நீங்கள் வரவில்லையே. எனவே, இறையில்லத்தை நோக்கிச் செல்லுங்கள். இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மை எவன் தடுக்கின் றானோ அவனுடன் நாம் போரிடுவோம்” என்று (ஆலோசனை) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பெயரால் பயணத்தைத் தொடருங்கள்” என்று கூறினார்கள்.241 4180, 4181 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) மர்வான் பின் அல் ஹகம் ஆகிய இருவரும் ஹுதைபியா (ஆண்டில் நடந்த)”உம்ரா' (நிகழ்ச்சி) குறித்துக் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா தினத்தன்று (குறைஷியரின் தலைவரான) சுஹைல் பின் அம்ரிடம் ஒரு (குறிப்பிட்ட) கால வரம்பிட்டுச் சமாதான ஒப்பந்தம் (செய்துகொள்வதாகப் பத்திரம்) எழுதியபோது, சுஹைல் பின் அம்ர் (பின்வரும்) சில நிபந்தனைகளையும் விதித்தார்: எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் திருப்பி அனுப்பியே ஆக வேண்டும்; அவரைவிட்டு நீங்கள் ஒதுங்கிவிட வேண்டும். இந்த நிபந்தனைகள்மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய சுஹைல் மறுத்தார். (ஆனால், தங்களுக்குப் பாதகமான) இதை இறைநம்பிக்கை யாளர்கள் வெறுத்தார்கள். மேலும், (இதற்குச் சம்மதிக்கச்) சிரமப்பட்டார்கள். அதுபற்றி (வியந்து) பேசவும் செய்தார்கள். சுஹைல் இந்த நிபந்தனைகள்மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய மறுத்துவிட்டபோது (அந்த நிபந்தனை களை ஏற்று) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒப்பந்தப் பத்திரத்தை) எழுதினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வந்து சேர்ந்த) சுஹைலின் மகன் அபூஜந்தலை அன்றைய தினமே அவருடைய தந்தை சுஹைல் பின் அம்ரிடம் திரும்ப ஒப்படைத்தார்கள். மேலும், அந்த (ஒப்பந்த)க் காலத்தில் தம்மிடம் வந்த எந்த ஆண் மகனையும் -அவர் முஸ்லிமாக இருந்தாலும்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள். (அப்போது) இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்தனர். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு (ஹிஜ்ரத் செய்து) வந்தவர்களில் உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்ஸூமும் இருந்தார். அவர் இளம் பெண்ணாக இருந்தார். அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பிவிட வேண்டுமெனக் கோரியபடி அவர்களின் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது, இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் விஷயத்தில் தனது (60:10ஆம்) வசனத்தை அல்லாஹ் அருளினான்.242 இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4179
- Book Index
- 220
Grades
- -