ஹதீஸ்கள்
#4141
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் சொன்னதைப் பற்றி அறிவித்தனர். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதி யினை அறிவித்தனர். அவர்களில் சிலர், சிலரைவிட இந்தச் சம்பவத்தை நன்கு நினைவில் நிறுத்தியவர்களாகவும், அதை எடுத்துரைப்பதில் சிறந்தவர்களாகவும் இருந்தனர். ஆயிஷா (ரலி) அவர்களின் (இச் சம்பவம்) தொடர்பாக ஒவ்வொருவரும் அறிவித்த செய்தியை நான் மனனமிட்டுக் கொண்டேன். இவர்களில் சிலர் சிலரை விட இந்தச் சம்பவத்தை நன்கு மனனமிட்டவர்களாக இருந்தாலும் ஒருவரின் அறிவிப்பு மற்றவரின் அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் பயணம் புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (யாரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் மேற்கொண்ட (“பனுல் முஸ்தலிக்' என்ற) ஓர் அறப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய “பர்தா' எனும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்பட்டும் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்பட்டும் வந்தேன். நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் அந்தப் போர் முடிந்து திரும்பிக் கொண்டி ருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கியபோது, இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். அப்போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக்கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) “ழஃபாரி' நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து)விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று எனது மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக்கொண்டிருந்தது (நான் விரைவில் திரும்பிச் சென்று படையினருடன் சேர விடாமல்) என்னைத் தாமதப்படுத்திவிட்டது. என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைக்கும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு, அதைச் சுமந்து சென்று, நான் பயணம் செய்து வந்த என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவையே அவர்கள் உண்பார்கள். ஆகவே சிவிகையைத் தூக்கியபோதும், அதைச் சுமந்தபோதும் அது கனமில்லாமல் இருந்ததை (சம்பந்தப்பட்ட) மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் இளம் வயது பெண்ணாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்க லானார்கள். படையினர் சென்ற பிறகு, (தொலைந்து போன) எனது மாலை கிடைத்துவிட்டது. நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்.) அங்கு அவர்களில் அழைப்பவரோ பதில் கொடுப்பவரோ எவரும் இருக்கவில்லை. நான் ஏற்கெனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிப்போ(ய் அங்கு அமரலா)னேன். நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு படையினர் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மிகைத்துவிட, நான் தூங்கிவிட்டேன். படை சென்றதற்குப் பின்னால் (படையினர் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச்செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமீ அத்தக்வானீ என்பவர் அங்கு இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் (அங்கே) தூங்கிக்கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். பர்தா சட்டம் அருளப்பெறுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். ஆகவே, என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்துகொண்டார். அவர், என்னை அறிந்துகொண்டு, “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே எனது முகத்திரையால் என் முகத்தை மறைத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர், “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்று கூறியதைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து கேட்கவுமில்லை. பிறகு, அவர் விரைவாகத் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக்கொள்ள வசதியாக) அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் எழுந்து சென்று அதில் ஏறிக்கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக்கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அப்போது அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்டிருந்தார்கள். (இப்போது எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்துபோனார்கள். என்மீது அவதூறு (பிரசாரம்) செய்வதில் பெரும் பங்கு வகித்துக்கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தப் பழிச்சொல் பரப்பப்பட்டும், அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலிடம் பேசப்பட்டும் வந்தது. அப்போது அவன் அதை ஏற்று, காது தாழ்த்திக் கேட்டு, அதை (மேன்மேலும்) கிளறிவிட்டுக்கொண்டிருந்தான்- என்று எனக்குச் செய்தி கிடைத்தது. அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் மேலும் கூறுகிறார்கள்: அவதூறு கூறியவர்(களான முஸ்லிம்)களில் ஹஸ்ஸான் பின் ஸாபித், மிஸ்த்தஹ் பின் உஸாஸா, ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ஆகியோரைத் தவிர மற்றச் சிலரின் பெயர்கள் எனக்குத் தெரியாது. ஆயினும் அல்லாஹ் (தனது வேதத்தில், “எவர் அவதூறு கற்பித்தார்களோ நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு குழுவினரே” என்று 4:11ஆம் வசனத்தில்) கூறியதுபோல அவர்கள் ஒரு குழுவினர் ஆவர். அ(ந்தச் சம்பவத்)தில் பெரும் பங்கு வகித்தவன் (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் ஆவான். தமக்கு முன்னால் ஹஸ்ஸான் அவர்கள் ஏசப்படுவதை ஆயிஷா (ரலி) அவர்கள் விரும்பாதவர்களாக இருந்தார்கள். மேலும், “அந்த ஹஸ்ஸான் அவர்கள்தான் இந்தக் கவிதையைச் சொன்னவர்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவார்கள்: “(பகைவர்களே!) என் தந்தையும், என் தந்தையின் தந்தையும், எனது மானமும்உங்களிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களின் மானத்தைக் காக்கும் கேடய மாகும்” (தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாத காலம் நான் நோயுற்றுவிட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் நோயுறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இந்த முறை நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது) அவர்களிடம் காண முடியாமல்போனது, எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார் கள்; பிறகு, “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்பார்கள்; பிறகு போய்விடுவார்கள். அவ்வளவுதான். இதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டுவந்த) அந்தத் தீய சொல்லில் ஒரு சிறிதும், நான் நோயிலிருந்து குணமடைந்து வெளியே செல்லும்வரை எனக்குத் தெரியாது. அப்போது நான் மிஸ்த்தஹின் தாயாருடன் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்திவந்த “மனாஸிஉ' (எனப்படும் புறநகர்ப் பகுதியை) நோக்கிச் சென்றோம்.நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்றுகொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் முந்தைய அரபியரின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதை நாங்கள் தொந்தரவாகக் கருதிவந்தோம். நானும் உம்மு மிஸ்த்தஹும் சென்றோம். -அவர் அபூருஹ்ம் பின் முத்தலிப் பின் அப்தி மனாஃப் அவர் களின் மகளாவார். அபூபக்ர் (ரலி) அவர் களின் தாயின் சகோதரியான (ராயித்தா) பின்த் ஸக்ர் பின் ஆமிர்தான் உம்மு மிஸ்த்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்த்தஹின் மகனே, மிஸ்த்தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அல்முத்தலிப் ஆவார். (இத்தகைய) உம்மு மிஸ்த்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக்கொண்டு என் வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்த்தஹ் தன் ஆடையில் இடறிக்கொண்டார். உடனே அவர், “மிஸ்த்தஹ் நாசமாகட்டும்” என்று (தன் மகனைச் சபித்தவராகக்) கூறினார். நான், “மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்” என்று கூறினேன். அதற்கு அவர், “அம்மா! அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டார். “என்ன சொன்னார்?” என்று நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் இல்லத்திற்குத் திரும்பிவந்தபோது (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து சலாம் கூறிவிட்டு “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அப்போது நான், “என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?” என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து, என்மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். (நான் என் தாய் வீட்டிற்குச் சென்றேன்) என் தாயாரிடம், “அம்மா! மக்கள்(என்னைப் பற்றி) என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்று கேட்டேன். என் தாயார், “அன்பு மகளே! உன்மீது (இந்த விஷயத் தைப்) பெரிதுபடுத்திக்கொள்ளாதே! அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்தி கள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்” என்று கூறினார்கள். நான், “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்?” என்று (வியப்புடன்) கேட்டேன். அன்றிரவு காலைவரை அழுதேன். என் கண்ணீரும் ஓயவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்தபோதும் அழுதேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் அவர்களையும், உசாமா பின் ஸைத் அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வேதஅறிவிப்பு (வஹீ) (தாற்காலிகமாக) நின்றுபோயிருந்தது. உசாமா அவர்களோ, நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும், நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் குடும்பத்தார் மீது இருந்த (பாசத்)தில் தாம் அறிந்துள்ளதையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். “(அல்லாஹ்வின் தூதரே!) தங்களுடைய துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை” என்று உசாமா கூறினார்கள். அலீ அவர்களோ (நபி (ஸல்) அவர்களின் மன வேதனையைக் குறைக்கும் விதமாக), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா நீங்கலாகப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண்ணை (பரீராவை)க் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, “பரீராவே! நீ (ஆயிஷாவிடம்) உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, “தங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர் குழைத்த மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (கவனக் குறைவான) இளவயதுப் பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரில் (மேடையில்) ஏறி நின்று அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலைத் தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஸ்லிம்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனை அளித்த ஒரு மனிதனைத் தண்டிக்க எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நல்லதையே நான் அறிவேன். அவர்கள் (அவதூறு கற்பித்த நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். என்னோடுதான் அவர் என் வீட்டாரிடம் வந்திருக்கிறார் (தனியாக வந்ததில்லை)” என்று கூறினார்கள். உடனே பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! அவனை தண்டிக்கத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனதுகழுத்தைத் துண்டித்துவிடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்” என்று கூறினார்கள். உடனே, “கஸ்ரஜ்' குலத்தைச் சேர்ந்த ஒருவர் எழுந்தார். அவர் “கஸ்ரஜ்' குலத்தின் தலைவரான சஅத் பின் உபாதா ஆவார். ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களின் தாயார், இவரது குடும்பத்தில் ஒருவரும், இவருடைய தந்தையின் சகோதரரின் மகளும் ஆவார். இவர் அதற்குமுன் நல்ல மனிதராகத்தான் இருந்தார். ஆயினும், குலமாச்சரியம் அவரை உசுப்பிவிடவே சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பார்த்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! தவறாகச் சொல்லிவிட்டீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது. அவன் உமது குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவன் கொல்லப்படுவதை நீர் விரும்பமாட்டீர்” என்று கூறினார். உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, - இவர், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். - சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம், “நீர்தான் தவறாகப் பேசினீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகின்றீர்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேடைமீது நின்றுகொண்டிருக்க அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிடத் தயாராகிவிட்டனர்.நபி (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு தாமும் மௌனமாகிவிட்டார்கள். அன்றைய நாள் முழுவதும் நான் அழுதுகொண்டிருந்தேன். என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க), என் ஈரல் பிளந்துவிடுமோ என்றெண்ணும் அளவுக்கு அழுதிருந்தேன். என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக் கமும் தழுவவில்லை. என் தாய் தந்தையர் என் அருகேயிருக்க நான் அழுதுகொண்டிருந்தபோது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்துகொண்டாள். நாங்கள் இவ்வாறு இருந்துகொண்டிருக்கும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு அமர்ந்துகொண்டார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாத காலம்வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே அவர்கள் இருந்துவந்தார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனைப் புகழ்ந்துவிட்டு, “இறைவாழ்த்துக்குப்பின்! ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னை குற்றமற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு. ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்தபோது எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை. நான் என் தந்தையார் (அபூபக்ர் (ரலி) அவர்கள்) இடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு என் சார்பாகப் பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு (என் சார்பாகப்) பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தாயார், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், “நானோ வயது குறைந்த இளம் பெண் ஆவேன். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவளும் ஆவேன். இந்நிலையில், அல்லாஹ்வின் மீதாணையாக! (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட) இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனத்தில் பதிந்துபோய், அதை உண்மையென்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே, நான் குற்றமற்றவள் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் அதை நம்பப்போவதில்லை; நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால் -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (நபி (யஅகூப்) அலை) அவர்களையே உவமையாகக் கருதுகிறேன். (அதாவது:) “(இதைச்) சகித்துக்கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும்.” (குர்ஆன் 12:18)” என்று கூறினேன். “நான் அப்போது குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்; (அந்த) அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான்” என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக்கொண்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! என் விஷயத்தில் (மக்களால்) ஓதப்படுகின்ற வேத அறிவிப்பை (குர்ஆனில்) அல்லாஹ் அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் பேசுகின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் என்னை குற்றமற்றவள் என்று உணர்த்தும் ஏதேனுமொரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள் என்றுதான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது (திருக்குர்ஆன் வசனங்கள்) அருளப்பெறத் தொடங்கிவிட்டன. உடனே (வேத அறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து சின்னஞ்சிறு முத்துகளைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அவர்கள்மீது அருளப்பெற்ற (இறைச்)சொற்களின் பாரத்தினால்தான் (அவர்களுக்கு வியர்வை வழியும் அளவுக்குச் சிரம நிலை) ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டு விலகியவுடன் அவர்கள் சிரித்துக்கொண்டே பேசிய முதல் வார்த்தையாக, “ஆயிஷா! அல்லாஹ் உன்னைக் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்” என்று கூறினார்கள். உடனே என் தாயார், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து செல்” என்று (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், “மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்லமாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்து)வேன்” என்றேன். (அப்போது) அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் (24 : 11-20) பத்து வசனங்களை அருளியிருந் தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவு படுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்த்தஹுக்காக நான் சிறிதும் உதவி செய்யமாட்டேன்” என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள் - மிஸ்த்தஹ் பின் உஸாஸா, தம் உறவினர் என்பதாலும் அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவுக்குக் கொடுத்துவந்தார்கள் - அப்போது அல்லாஹ், “உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் (தம்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதை மன்னித்து (பிழைகளை)ப் பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவான்” (24:22) எனும்வசனத்தை அருளினான். அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்த்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவுக்காக வழங்கி வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக் கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்தமாட்டேன்” என்றும் கூறினார்கள். (குர்ஆனில் எனது கற்பொழுக்கம் பற்றிய வசனங்கள் அருளப்பெறுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள். “ஸைனபே! “நீ (ஆயிஷாவைக் குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?' அல்லது “(அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?' என்று (ஸைனபிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழிசுமத்தாமல்) நான் பாதுகாத்துவைத்திருக்கிறேன். அல்லாஹ் வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன்” என்று பதிலளித்தார்கள். ஸைனப் அவர்கள்தான், நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், தார்மீகப் பண்பால் அவரை அல்லாஹ் பாதுகாத்திருந்தான்.216 ஆனால், ஸைனபுக்காக அவருடைய சகோதரி ஹம்னா (என்னுடன்) போரிட லானார். (என் விஷயத்தில் அவதூறு பேசி) அழிந்துபோனவர்களுடன் அவரும் அழிந்துபோனார். அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதுதான் அந்த (நால்வர்) குழுவிடமிருந்து எனக்குக் கிடைத்த அறிவிப்பாகும். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! எவரைக் குறித்து (அந்தப் பழிச்சொல்) கூறப்பட்டதோ அந்த மனிதர் (ஸஃப்வான், தம்முடைய அன்னையான என்னுடன் தம்மை இணைத்து அவதூறு பேசுவதைக் கேட்டு), “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்); எனது உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் ஒருபோதும் எந்த (அந்நியப்) பெண்ணின் மறைவிடத்தையும் திறந்ததில்லை” என்று கூறினார். அதன் பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் (உயிர்த் தியாகியாகக்) கொல்லப்பட்டார். இதை உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4141
- Book Index
- 185
Grades
- -