ஹதீஸ்கள்
#4039
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை அபூராஃபிஉவிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்தார்கள். அபூராஃபிஉ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புண்படுத்திவந்ததுடன், அவர்களுக்கெதிராக(ப் பகைவர்களுக்கு) உதவியும் செய்துவந்தான்.104 அவன் ஹிஜாஸ் பிரதேசத்திலிருந்த தனது கோட்டையில் இருந்தான். ஆகவே அன்சாரிகள் அந்தக் கோட்டையை நெருங்கினார்கள். அப்போது சூரியன் மறைந்துவிட்டிருந்தது. மக்கள் தங்கள் மேய்ச்சல் கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள் தம் சகாக்களிடம், “நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் காவலனிடம் சென்று ஏதாவது தந்திரம் செய்து (கோட்டைக்கு) உள்ளே நுழைய முடியுமா என்று பார்த்துவருகிறேன்” என்று கூறினார். உடனே அவர் சென்று கோட்டை வாசலை நெருங்கினார். பிறகு, தமது ஆடையால் தம்மை மூடிக்கொண்டு இயற்கைக் கடனை நிறைவேற்றுவது போல் (கோட்டைக்கு வெளியே ஓரிடத்தில்) அமர்ந்துகொண்டார். (கோட்டைவாசி களான) மக்கள் (அனைவரும்) உள்ளே நுழைந்துவிட்டனர். அப்போது காவலன், “அல்லாஹ்வின் அடியானே! (கோட்டைக்கு) உள்ளே நுழைய விரும்பினால் நுழைந்துகொள். நான் வாசலை மூடப்போகிறேன்” என்றுகூறினான். உடனே நான் உள்ளே நுழைந்து (ஓரிடத்தில்) பதுங்கிக்கொண்டேன். மக்கள் (அனைவரும்) நுழைந்ததும் அவன் வாசலை மூடிவிட்டான். பிறகு சாவிகளை ஒரு கொழுவியில் (கொக்கி) தொங்கவிட்டான். நான் சாவிகளை நோக்கிச் சென்று அவற்றை எடுத்துக்கொண்டேன். பிறகு வாசலைத் திறந்தேன். அபூராஃபிஉவிடம் இராக்கதை சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது அவன் தனது மாடியறையில் இருந்தான். அவனுடைய இராக்கதை நண்பர்கள் அவனைப் பிரிந்து (விடைபெற்றுச்) சென்றபோது அவனை நோக்கி நான் (ஏணியில்) ஏறினேன். (கோட்டையின்) ஒவ்வொரு வாசலையும் திறக்கும்போதும் உள்ளிருந்து நான் தாழிட்டுக்கொண்டே சென்றேன். மக்கள் என்னை இனம் கண்டுகொண்டாலும் அபூராஃபிஉவை நான் கொன்றுவிடும்வரையில் அவர்கள் என்னை வந்தடையப் போவதில்லை” என்று நான் (என் மனத்திற்குள்) கூறிக்கொண்டேன். பிறகு அவனிடம் போய்ச்சேர்ந்தேன். அவன் இருட்டான ஓர் அறையில் தன் குடும்பத்தாருக்கிடையே இருந்தான். அந்த வீட்டில் அவன் எங்கே இருக்கிறான் என்பது எனக்குத் தெரியவில்லை. அப்போது நான், “அபூராஃபிஉவே!' என்று அழைத்தேன். அவன், “யார் அது?' என்று கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குறிவைத்து வாளால் பதற்றத்துடன் ஒரு வெட்டு வெட்டினேன். (இருப்பினும், என் நோக்கம்) எதையும் நான் நிறைவேற்றி வி(ட்)ட(தாகக் கருத)வில்லை. அப்போது அவன் கூச்சலிட்டான். உடனே நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன். சிறிது நேரம் தாமதித்து மீண்டும் அவனிடம் வந்து, “அபூராஃபிஉவே! இது என்ன சத்தம்” என்று (அவனுக்கு உதவ வந்தவன்போல்) கேட்டேன். அதற்கு அவன், “உன் தாய்க்குக் கேடு நேரட்டும்! எவனோ ஒருவன் வீட்டில் (நுழைந்து) சற்றுமுன் என்னை வாளால் வெட்டினான்” என்று கூறினான். உடனே நான் ஆழப்பதியும்படி இன்னொரு வெட்டு வெட்டினேன். (அப்போதும்) அவனை நான் கொல்ல (முடிய)வில்லை. பிறகு வாள் முனையை அவன் வயிற்றில் வைத்து அழுத்தினேன். அது முதுகு வழியே வெளியேறியது. அப்போது நான் அவனைக் கொன்று விட்டேன் என்று அறிந்துகொண்டேன். பிறகு ஒவ்வொரு கதவாக எல்லாக் கதவுகளையும் திறந்துகொண்டே சென்று அவனது ஏணிப்படியை அடைந்தேன். (ஏணியில் இறங்கலானேன்.) தரைக்கு வந்து விட்டேன் என்று நினைத்துக்கொண்டு எனது காலை வைத்தேன். (ஆனால்,) நிலவு காயும் (அந்த) இரவில் நான் விழுந்துவிட்டேன். அப்போது எனது கால் உடைந்து விட்டது. உடனே நான் தலைப்பாகை(த் துணி)யால் அதற்குக் கட்டுப்போட்டேன். பிறகு நடந்து வந்து (கோட்டை) வாசலில் அமர்ந்துகொண்டேன். “நான் அவனைக்கொன்றுவிட்டேன் என்று (உறுதியாக) அறியும்வரையில் நான் இந்த இரவில் (இங்கிருந்து) நகரமாட்டேன்” என்று (எனக்குநானே) சொல்லிக்கொண்டேன். பிறகு, அதிகாலையில் சேவல் கூவியபோது மரணச் செய்தி அறிவிப்ப வன் கோட்டைச் சுவர்மீது நின்று, “ஹிஜாஸ்வாசிகளின் (பிரபல) வியாபாரி அபூராஃபிஉ இறந்துவிட்டார்” என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் என் சகாக்களிடம் வந்து, “விரைவாகச் செல்லுங்கள். அபூராஃபிஉவை அல்லாஹ் கொன்றுவிட்டான்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களை அடைந்து நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “உனது காலை நீட்டு” என்று கூறினார்கள். நான் என் காலை நீட்டினேன். அதில் (தம் கரத்தால்) தடவிவிட்டார்கள். (எனது கால் குணமடைந்து) ஒருபோதும் நோய் காணாததுபோல் அது மாறிவிட்டது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4039
- Book Index
- 86
Grades
- -