ஹதீஸ்கள்
#4037
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கஅப் பின் அல்அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாராயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்” என்று சொன்னார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள்99 எழுந்து, “நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறை கூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(சரி) சொல்' என்றார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, “இந்த மனிதர் (முஹம்மத்-ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்” என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, “உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்” என்றும் கூறினார்கள். கஅப் பின் அல்அஷ்ரஃப், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்” என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள், “நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இன்னும் இருந்துகொண்டிருக்கிறோம்)” என்று (சலிப்பாகப் பேசுவதுபோல்) கூறிவிட்டு, “நீ எங்களுக்கு ஒரு வஸ்க் அல்லது இரண்டு வஸ்க் (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது கஅப் பின் அல்அஷ்ரஃப், “சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், “நீ எதை விரும்புகிறாய் (கேள்)?” என்று கூறினர். கஅப் பின் அல்அஷ்ரஃப், “உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்” என்று சொன்னான். அவர்கள், “எங்கள் பெண்களை எப்படி அடைமானமாக உன்னிடம் தர முடியும்? நீயோ அரபிய ரிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)” என்று சொன்னார்கள். “(அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், “எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும்போது) ஏசப்பட்டால் அப்போது, “இவன் ஒரு வஸ்க் அல்லது இரண்டு வஸ்க்குகளுக்குப் பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்' என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே!எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்” என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். (பிறகு) அவர்கள் தம்முடன் அபூநாயிலா (ரலி) அவர்கள் இருக்க, இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். -அபூநாயிலா (ரலி) அவர்கள், கஅப் பின் அல்அஷ்ரஃபிற்குப் பால்குடிச் சகோதரர் ஆவார்- அவர்களைத் தனது கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் பின் அல்அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், “இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர் (வேறு யாருமல்ல.) முஹம்மத் பின் மஸ்லமாவும் எனது (பால்குடிச்) சகோதரர் அபூநாயிலாவும்தான்” என்று பதிலளித்தான். அம்ர் அல்லாத மற்ற அறிவிப்பாளர்கள், “(முஹம்மத் பின் மஸ்லமாவுடன் வந்தவர்கள்) அபூஅப்ஸ் பின் ஜப்ர் (ரலி), ஹாரிஸ் பின் அவ்ஸ் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர்தான்” என்று கூறினர். அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், “தம்முடன் இருவரிருக்க முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் வந்தார்கள்” என்று அறிவித்தார்கள். -அறிவிப்பாளர் அம்ர் (ரஹ்) அவர்கள் ஒருமுறை, “(முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் தம் சகாக்களை நோக்கி) “பிறகு அவனது தலையை உங்களையும் நான் நுகரச் செய்வேன்' என்று கூறினார்கள்” என்று அறிவித்தார்கள். -அம்ர் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றவர்களின் அறிவிப்பில், “என்னிடம் அரபுப் பெண்களிலேயே நறுமணம் மிக்கவளும், அரபுகளிலேயே முழுமை யானவளும் இருக்கிறாள்” என்று கஅப் பின் அல்அஷ்ரஃப் கூறினான் எனக் காணப்படுகிறது. அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), “கஅப் பின் அல்அஷ்ரஃப் வந்தால் நான் அவனது (தலை) முடியைப் பற்றியிழுத்து அதை நுகர்வேன். அவனது தலையை எனது பிடியில் கொண்டுவந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதைச் சைகையாக எடுத்துக்கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டிவிடுங்கள்” என்று (உபாயம்) கூறினார்கள். பிறகு கஅப் பின் அல்அஷ்ரஃப் (தன் ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “இன்றுபோல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை” என்று சொன்னார்கள். மேலும், முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?” என்று கேட்டார்கள். அவன், “சரி (நுகர்ந்து பார்)” என்று கூறினான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனது தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரச் சொன்னார்கள். “(மீண்டுமொரு முறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா?” என்று கேட்டார்கள். அவன், “சரி (அனுமதிக்கிறேன்)' என்று கூறினான். முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டுவந்தபோது, “பிடியுங்கள்' என்று கூறினார்கள். உடனே (அவர்களுடைய சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.100 அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் பல தடவை இந்த ஹதீஸை எமக்கு அறிவித்தார்கள். ஆயினும், அப்போது அவர்கள் “ஒரு வஸ்க், இரண்டு வஸ்குகள் (அளவை)' சம்பந்தமாகக் கூறவில்லை. அன்னாரிடம் நான், “இந்த அறிவிப்பில் ஒரு வஸ்க், இரு வஸ்குகள் சம்பந்தமாக (ஏதேனும்) இடம்பெற்றுள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அதில் ஒரு வஸ்க், இரு வஸ்குகள் பற்றி இடம் பெற்றுள்ளது என எண்ணுகிறேன்” என்று பதிலளித்தார்கள்.- -(அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) கூறுகிறார்கள்:) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத இன்னொருவரின் அறிவிப்பில், “குருதி சொட்டுவது போன்ற ஒரு சப்தத்தை நான் கேட்கிறேன்” என்று கஅபின் மனைவி (ஏதோ ஆபத்து நேரவிருப்பதை உணர்த்தும் விதத்தில்) கூற அவன், “அவர் என் சகோதரர் முஹம்மத் பின் மஸ்லமாவும், என் பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும்தான். ஒரு கண்ணியவான் இரவு நேரத்தில் (ஈட்டி) எறிய அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்” எனப் பதிலளித்ததாகவும் இடம்பெற்றுள்ளது. -முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த இரு மனிதர்களுடன் (கஅப் பின் அல் அஷ்ரஃபின் வீட்டுக்கு) உள்ளே நுழைந்தார்கள்- அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், அந்த இரு மனிதர்களின் பெயர்களையும் குறிப்பிட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள், “அவர்களில் சிலரின் பெயரை மட்டும் அம்ர் குறிப்பிட்டார். “இரண்டு மனிதர்கள் தம்முடனிருக்க முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) வந்தார்கள்' என்றே அம்ர் அறிவித்தார்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4037
- Book Index
- 84
Grades
- -