ஹதீஸ்கள்
#4003
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து எனது பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த நிதியான ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு (மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத்) தந்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னுடன் வந்து “இத்கிர்' புல்லை நாங்கள் கொண்டு வருவதெனச் சொல்லியிருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர் களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளை யும், தீவனப் பைகள் மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன். அப்போது என் இரு ஒட்டகங்களும் அன்சாரீ ஒருவரது அறையின் அருகே மண்டியிட்டு அமரச் செய்யப்பட்டிருந்தன. நான் சேகரிக்க விரும்பியவற்றைச் சேகரித்துவிட்டபோது (திரும்பி வந்தேன். அப்போது) என் இரு ஒட்டகங்களின் திமில்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதி (கத்தியால்) பிளக்கப்பட்டிருந்தது. அவற்றின் ஈரல் குலைகள் பிடுங்கப்பட்டிருந்தன. அவற்றின் (இந்த அவலக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் (கண்ணீர் சிந்தவிடாமல்) கட்டுப்படுத்த முடியவில்லை. நான், “இதை(யெல்லாம்) செய்தவர் யார்?” என்று கேட்டேன். மக்கள், “ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப்தான் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழு ஒன்றில்தான் இருக்கிறார். அவருடன் அவருடைய நண்பர்களும் பாடகியொருத்தியும் உள்ளனர். அந்தப் பாடகி தமது பாடலினிடையே, “ஹம்ஸாவே! இந்தக் கொழுத்த கிழம் ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி)விடுங்கள்” என்று பாடினாள். உடனே ஹம்ஸா தமது வாளை நோக்கிப் பாய்ந்து (எடுத்து வந்து) அந்த இரு ஒட்டகங்களின் திமில்களை வெட்டி இடுப்பைப் பிளந்தார். மேலும், அதன் ஈரல் குலைகளை வெளியே எடுத்தார்” என்று பதிலளித்தனர். (அலீ (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:) உடனே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா அவர்களும் இருந்தார்கள். நான் சந்தித்த (துயரத்)தை நபி (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டு, “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இன்றைய நாளைப் போன்ற (பயங்கர மான) ஒருநாளை (ஒருபோதும்) நான் பார்த்ததில்லை. ஹம்ஸா, என் இரு ஒட்டகங்களையும் (அநியாயமாகத்) தாக்கி அவற்றின் திமில்களை அறுத்துவிட்டார். அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதிகளை (வாளால்) பிளந்துவிட்டார். அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் (நண்பர்கள்) குழுவுடன் இருக்கிறார்” என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது அங்கி ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அணிந்துகொண்டு நடந்து செல்ல, அவர்களை நானும் ஸைத் பின் ஹாரிஸாவும் பின்தொடர்ந்து சென்றோம். ஹம்ஸா இருந்த வீட்டிற்கு வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். நபிகளாருக்கு அனுமதியளிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸாவை, அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கத் தொடங்கினார்கள். ஹம்ஸாவின் இரு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார். ஹம்ஸா, நபி (ஸல்) அவர்களைப் பார்த்தார். பிறகு (தமது) பார்வையை உயர்த்தி அவர்களின் இரு முழங்கால்களையும் பார்த்தார். பிறகு பார்வையை உயர்த்தி நபி (ஸல்) அவர்களது முகத்தைப் பார்த்தார். பிறகு, “நீங்கள் எல்லாம் என் தந்தையின் அடிமைகள்தானே?” என்று கேட்டார். அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல்) அப்படியே பின்வாங்கிய வண்ணம் தாம் வந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.45 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4003
- Book Index
- 54
Grades
- -