ஹதீஸ்கள்
#3950
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் வாயிலாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் (அறியாமைக் காலத்தில் இணை வைப்போரின் முக்கிய தலைவர்களில் ஒருவனான) உமய்யா பின் கலஃபுக்கு நண்பராயிருந்தார். உமய்யா, மதீனா வழியாக (ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காக)ச் செல்லும்போது (மதீனாவில்) சஅத் (ரலி) அவர்களிடம் தங்குவார். (அதே போல்) மக்கா வழியாக சஅத் (ரலி) அவர்கள் சென்றால் உமய்யாவிடம் தங்குவார்கள். (ஹிஜ்ரத் நடைபெற்று) நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்த சமயம், உம்ரா செய்யும் நோக்கத்தில் சஅத் (ரலி) அவர்கள் மக்காவிற்குச் சென்றபோது உமய்யாவிடம் தங்கினார்கள். (அப்போது நடந்ததை சஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) “இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதற்கு (ஏதுவாக) ஆள் நடமாட்டமில்லாத (அமைதியான) ஒரு நேரத்தை எனக்குக் கூறுவீராக” என்று நான் உமய்யாவிடம் கேட்டேன். (மக்கள் ஓய்வெடுக்கும்) நண்பகலுக்கு நெருக்கமான நேரத்தில் என்னுடன் உமய்யா புறப்பட்டார். (நான் தவாஃப் செய்துகொண்டிருந்தபோது) எங்களை அபூஜஹ்ல் சந்தித்து (உமய்யாவின் குறிப்புப் பெயரைச் சொல்லி), “அபூஸஃப்வானே! உம்மோடு இருக்கும் இவர் யார்?” என்று கேட்டார். உமய்யா, “இவர்தான் சஅத்” என்றார். அப்போது என்னிடம் அபூஜஹ்ல், “மதம் மாறிச் சென்றவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிவதாக நினைத்துக்கொண்டு (அவர்களுக்கு மதீனாவில்) தஞ்ச மளித்த நீங்கள் கொஞ்சமும் அஞ்சாமல் மக்கா(விற்குள்) வந்து (கஅபாவை) சுற்றிக்கொண்டிருப்பதை நான் காண்பதா? அல்லாஹ்வின் மீதாணையாக! அபூஸஃப்வானோடு (மட்டும்) நீ இல்லா விட்டால் நீ உன் வீட்டாரிடம் சுகமாகப் போய்ச் சேர்ந்திருக்கமாட்டாய்” என்று சொன்னார். அதற்கு அபூஜஹ்லைப் பார்த்து, நான் உரத்த குரலில், “அல்லாஹ்வின் மீதாணையாக! (கஅபாவைச்) சுற்ற விடாமல் மட்டும் என்னை நீ தடுத்தால், நீ (வாணிபக் குழுவுடன் கடந்து) செல்லும்மதீனாவின் தடத்தை நான் இடை மறிப்பேன். இதைவிட அது உனக்கு மிகவும் கடினமானதாயிருக்கும்” என்று சொன்னேன். அப்போது என்னிடம் உமய்யா, “சஅதே! இந்த (மக்கா) பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் தலைவரான அபுல் ஹகம் (அபூஜஹ்ல்) எதிரில் சப்தமிட்டுப் பேசாதீர்!” என்று சொன்னார். அதற்கு நான், “உமய்யாவே! (அபூஜஹ்லுக்கு வக்காலத்து வாங்காமல்) எம்மை விட்டுவிடுவீராக! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (நபித்தோழர்கள்) உம்மைக் கொலை செய்வார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்” என்று சொன்னேன். “மக்காவிலா (நான் கொல்லப்படுவேன்)?” என்று உமய்யா கேட்டார். அதற்கு, “எனக்குத் தெரியாது” என்று நான் பதிலளித்தேன். இதனால் உமய்யா மிகவும் பீதியடைந்தார். தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது, (தம் மனைவியிடம்), “உம்மு ஸஃப்வானே! என்னைப் பார்த்து சஅத் என்ன சொன்னார் தெரியுமா?” என்று கேட்டார். “அவர் (அப்படி) என்ன சொன்னார்?” என்று அவள் கேட்டதற்கு உமய்யா, “அவர்கள் (நபித்தோழர்கள்) என்னைக் கொலை செய்வார்கள் என்று அவர்களிடம் முஹம்மது தெரிவித்தாராம். நான், “மக்காவிலா?' என்று (சஅதிடம்) கேட்டேன். “தெரியாது' என்று சஅத் சொன்னார்” (என்று கூறிவிட்டு,) “அல்லாஹ்வின் மீதாணையாக! நான், “மக்கா'வைவிட்டு (இனிமேல்) வெளியேறப்போவதில்லை” என்றும் கூறினார். பத்ர் போர் நாள் வந்தபோது, போருக்குப் புறப்படும்படி மக்களைத் தூண்டிக்கொண்டிருந்த அபூஜஹ்ல், “உங்கள் வணிகக் குழுவைச் சென்ற டையுங்கள் (அதைக் காப்பாற்றுங்கள்)” என்று கூறினார். ஆனால், உமய்யா (மக்காவிலிருந்து) வெளியே செல்வதை வெறுத்தார். (இதை அறிந்த) அபூஜஹ்ல் அவரிடம் வந்து, “அபூஸஃப்வானே! (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவரான நீங்களே (போருக்குச் செல்லாமல்) பின்வாங்குவதை மக்கள் கண்டால் உங்களுடன் அவர்களும் பின்வாங்கி (போருக்குச் செல்லாமல் இருந்து)விடுவார்களே” என்று சொன்னார். அபூஜஹ்ல், உமய்யாவிடம் இதை (வலியுறுத்திச்) சொல்லிக்கொண்டே இருந்தார். முடிவாக, உமய்யா, “இப்போது நீ என்னை வென்றுவிட்டாய் (உன் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்). ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நான் மக்கா நகரத்தின் உயர்ரக ஒட்டகம் ஒன்றை வாங்கப்போகிறேன்” என்று சொன்னார்; (தமக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் நிலை வந்தால் தப்பி வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒட்டகம் ஒன்றும் வாங்கினார்.) பிறகு (தம் மனைவியிடம் வந்து) “உம்மு ஸஃப்வானே! (போருக்குச் செல்லத் தேவையான சாதனங்களை) எனக்குத் தயார் செய்” என்றார் உமய்யா. அப்போது அவள், “அபூஸஃப்வானே! உங்கள் யஸ்ரிப் (மதீனா) நண்பர் (சஅத், நீங்கள் கொல்லப்படுவது குறித்து) உங்களிடம் சொன்னதை மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டாள். அதற்கு உமய்யா, “இல்லை. (மறக்கவில்லை.) இவர்களுடன் சிறிதளவு தூரம் செல்வதைத் தவிர வேறெந்த எண்ணமும் எனக்கில்லை” என்றார். (பத்ர் போருக்கு) உமய்யா புறப்பட்டுச் சென்றபோது (படையினர் முகாமிட்டுத்) தங்கும் ஒவ்வோர் இடத்திலும் (தப்பியோட ஆயத்தமாக தமக்கு அருகிலேயே) தமது ஒட்டகத்தைக் கட்டிவைத்துக்கொள்ளலானார். அவர் இவ்வாறே தொடர்ந்து செய்துவந்தார். இறுதியில் பத்ர் போர்க்களத்தில் உமய்யாவை வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (முஸ்லிம் படையால்) கொலை செய்தான்.3 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #3950
- Book Index
- 2
Grades
- -