ஹதீஸ்கள்
#3696
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:59 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்தி யகூஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம், “உஸ்மான் (ரலி) அவர்களிடம் நீங்கள் அவர்களுடைய (தாய்வழிச்) சகோதரர் வலீத் (பின் உக்பா) பற்றிப் பேசாமலிருப்பது ஏன்? மக்கள் வலீத் விஷயத்தில் மிக அதிகமாகக் குறை கூறுகிறார்களே!” என்று கேட்டார்கள்.60 ஆகவே, நான் உஸ்மான் (ரலி) அவர்கள் தொழுகைக்காகப் புறப்பட்ட நேரத்தில் அவர்களைத் தேடிச் சென்றேன். அவர்களிடம், எனக்கு உங்களிடம் சற்று(ப் பேச வேண்டிய) தேவை உள்ளது. அது உங்களுக்கு (நான் கூற விரும்பும்) அறிவுரை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “ஏ மனிதரே! உம்மிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னார்கள். உடனே, நான் திரும்பி அவ்விருவரிடமும் வந்தேன். அப்போது உஸ்மான் (ரலி) அவர்களுடைய தூதுவர் (என்னைத் தேடி) வர, நான் அவர்களிடம் (மீண்டும்) சென்றேன். உஸ்மான் (ரலி) அவர்கள், “உங்கள் அறிவுரை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி அவர்கள்மீது (தன்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்குப் பதிலளித்தவர்களில் நீங்களும் ஒருவராயிருந்தீர்கள். ஆகவே, (மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்கும், அதன்பின் மதீனாவுக்குமாக) இரண்டு ஹிஜ்ரத்கள் மேற்கொண்டீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதருடன் தோழமை கொண்டு அவர்களுடைய வழிமுறையைப் பார்த்திருக்கிறீர்கள். மக்களோ வலீத் பின் உக்பாவைப் பற்றி நிறையக் குறைபேசுகிறார்கள் (நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்க நான், “இல்லை. ஆனால், திரைக்கப்பால் இருக்கும் கன்னிப் பெண்களிடம்(கூட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கல்வி சென்றடைந்துகொண்டிருக்கும்(போது, அந்த) அளவு (கல்வி) என்னிடமும் வந்து சேர்ந்துள்ளது (குறித்து வியப் பில்லை.)” என்று பதில் சொன்னேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “இறைவாழ்த்துக்குப்பின் கூறுகிறேன்: அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தான். அப்போது, அல்லாஹ்வின் அழைப்புக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அழைப்புக்கும் பதிலளித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். மேலும், அவர்கள் எ(ந்த வேதத்)தைக் கொடுத்தனுப்பப்பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக்கொண்டேன். நான் இரு ஹிஜ்ரத்துகளை மேற் கொண்டேன். - நீங்கள் சொன்னதைப் போல்- நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டேன்; அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை மரணிக்கச் செய்யும்வரை நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை. பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் அதைப் போலவே (நடந்துகொண்டேன்.) பிறகு உமர் அவர்களிடமும் அதைப் போலவே (நடந்துகொண்டேன்.) பிறகு நான் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டேன். ஆகவே, அவர்களுக்கிருந்தது போன்ற அதே உரிமை எனக்கில்லையா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (உங்களுக்கும் அதே போன்ற உரிமை இருக்கிறது)” என்று சொன்னேன். அவர்கள், “அப்படியென்றால் உங்களைக் குறித்து எனக்கு எட்டுகின்ற (என்னைக் குறைகூறும்) இந்தப் பேச்சுகளெல்லாம் என்ன? நீங்கள் வலீத் பின் உக்பா விஷயமாகச் சொன்னவற்றில் விரைவில் இறைவன் நாடினால் சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என்று சொன்னார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களை அழைத்து வலீத் பின் உக்பாவுக்கு (எதிராகச் சாட்சிகள் கிடைத்ததால் அவருக்கு) கசையடிகள் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்களும் வலீதுக்கு எண்பது கசையடிகள் கொடுத்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3696
- Book Index
- 46
Grades
- -