ஹதீஸ்கள்
#3674
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் வீட்டில் அங்கத் தூய்மை செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே எனது இந்த நாள் (முழுவதும்) இருப்பேன்” என்று சொல்லிக்கொண்டேன். நான் பள்ளிவாசலுக்கு வந்து நபி (ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், “நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்” என்று கூறினர். நான் (நபி (ஸல்) அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (இயற்கைக்) கடனை நிறைவேற்றி விட்டு அங்கத் தூய்மை செய்தார்கள். உடனே நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்துகொண்டேன். நான் (எனக்குள்), “இன்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வாயிற் காவலனாக இருப்பேன்” என்று சொல்லிக்கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து கதவைத் தள்ளினார்கள். நான், “யார் அது?” என்று கேட்டேன். அவர்கள், “(நான்தான்) அபூபக்ர் (வந்துள்ளேன்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “சற்றுப் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இதோ அபூபக்ர் அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் அபூபக்ர் அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம், “உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவிக்கிறார்கள்” என்று சொன்னேன். உடனே, அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன் (கிணற்றின்) சுற்றுச்சுவரில் அமர்ந்துகொண்டு நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்துக் கொண்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்துகொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை அங்கத் தூய்மை செய்துகொண்டு என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லி, விட்டுவிட்டு வந்திருந்தேன். ஆகவே (எனக்குள்), “அல்லாஹ் இன்னாருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச் செய்வான்” என்று சொல்லிக்கொண்டேன். - “இன்னார்' என்று அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியது. தம் சகோதரரைக் கருத்தில் கொண்டுதான்” என்று அறிவிப்பாளர் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- அப்போது ஒரு மனிதர் கதவை அசைத்தார். நான், “யார் அது?” என்று கேட்டேன். வந்தவர், “(நான்தான்) உமர் பின் அல்கத்தாப் (வந்துள்ளேன்)” என்று சொன்னார். நான், “கொஞ்சம் பொறுங்கள்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, “இதோ, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் சென்று, “உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்” என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச்சுவரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கம் அமர்ந்து கொண்டு தம் இரு கால்களையும் கிணற் றுக்குள் தொங்கவிட்டுக்கொண்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்துகொண்டேன். “அல்லாஹ் இன்னாருக்கு (என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச்செய்வான்” என்று (முன் போலவே எனக்குள்) கூறிக்கொண்டேன். அப்போது ஒரு மனிதர் வந்து கதவை ஆட்டினார். நான், “யார் அது?” என்று கேட்டேன். அவர், “(நான்தான்) உஸ்மான் பின் அஃப்பான் (வந்திருக்கிறேன்)” என்று பதிலளித்தார். உடனே, “கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்களுக்கு உஸ்மான் அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி கொடுங்கள். அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள்.34 அவ்வாறே நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று அவரிடம், “உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி சொன்னார்கள்” என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்தபோது) சுற்றுச்சுவர் (ஒரு பக்கம்) நிரம்பிவிட்டிருப்பதைக் கண்டார்கள். ஆகவே, மற்றொரு பக்கம் நபி (ஸல்) அவர்களுக்கு எதிரே அமர்ந்துகொண்டார்கள். அறிவிப்பாளர் ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், “நான் (நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும்) அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் அவர்களுக்கு எதிரே உஸ்மான் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த நிலையும் (தற்போது) அவர்களுடைய கப்றுகள் (மண்ணறைகள்) அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்” என்று சொன்னார்கள்.35 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3674
- Book Index
- 24
Grades
- -