ஹதீஸ்கள்
#2699
ஸஹீஹ் அல்-புகாரீ - Peacemaking
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்ய (மக்கா நோக்கி)ச் சென்றார்கள். மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களை மக்காவிற்குள் நுழையவிட மறுத்தார்கள். இறுதியில், நபி (ஸல்) அவர்கள், மக்காவில் (வரும் ஆண்டில்), தாம் (தம் தோழர்களுடன்) மூன்று நாட்கள் தங்க (அனுமதிக்க) வேண்டும் என்று மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, ‘‘இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம்” என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், ‘‘நாங்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டோம்; நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் அறிந்திருப்போமாயின் உங்களை (மக்காவில் நுழைய விடாமல்) தடுத்திருக்கமாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுதான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதும் ஆவேன்” என்று பதிலளித்துவிட்டு, அலீ (ரலி) அவர்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் தூதர்’ என்பதை அழித்துவிடுங்கள் என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ‘‘முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (தகுதியைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்து, ‘‘இது அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மத் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் ஆகும். (முஸ்லிம்களின்) ஆயுதம் எதுவும் உறையிலிருந்தபடியே தவிர, மக்காவினுள் நுழையாது. மக்கா வாசிகளில் எவரும் முஹம்மதைப் பின்தொடர்ந்து வர விரும்பினாலும்கூட, அவரை முஹம்மத் தம்முடன் அழைத்துச்செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மத் தடுக்கக் கூடாது” என்று எழுதினார்கள். (அடுத்த ஆண்டு) நபி (ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்தபோது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணை(யான மூன்று நாட்கள்) கழிந்தவுடன் மக்கா வாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை)விட்டு வெளியேறும்படி கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் கழிந்துவிட்டது” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுத் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா (ரலி) அவர்களின் (அனாதை) மகள், ‘‘என் தந்தையின் (பால்குடி) சகோதரரே! என் தந்தையின் சகோதரரே!” என்று (கூறிக்கொண்டே) முஸ்லிம்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ (ரலி) அவர்கள் அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம், ‘‘இவளை எடுத்துக்கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளைத் தூக்கிவை” என்று கூறி னார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் (மதீனா வந்தபின்) அலீ (ரலி) அவர்களும், ஸைத் பின் அல்ஹாரிஸா (ரலி) அவர்களும், ஜஅஃபர் (ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும், ‘அவளை நான்தான் வளர்ப்பேன்’ என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக்கொண்)டனர். அலீ (ரலி) அவர்கள், ‘‘நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் தந்தையின் சகோதரர் மகள்” என்று கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்கள், ‘‘இவள் என் தந்தையின் சகோதரர் மகள். இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத் தின்)கீழ் இருக்கிறார்” என்று கூறினார்கள். ஸைத் (ரலி) அவர்கள், ‘‘(இவள்) என் (நட்புறவு) சகோதரரின் மகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்குச் சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர் (ரலி) அவர்கள் அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித் தார்கள். மேலும், ‘‘சிற்றன்னை தாயின் இடத்தில் இருக்கிறார்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்களிடம், ‘‘நீர் என்னைச் சேர்ந்தவர்; நான் உம்மைச் சேர்ந்தவன்” என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கின்றீர்கள்” என்று சொன்னார்கள். ஸைத் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எமது பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Peacemaking
- Hadith Index
- #2699
- Book Index
- 9
Grades
- -