ஹதீஸ்கள்
#2669
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு செல்வத்தை (அநியாயமாக) அடைவதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய்ச் சத்தியம் செய்பவர், தம்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனை (மறுமையில்) சந்திப்பார்” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.) பிறகு அதை உறுதிப்படுத்தும் விதத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘எவர் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ, அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்கவும்மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும்” (3:77) எனும் வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறகு அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, ‘‘அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் லி ரலி) உங்களிடம் என்ன சொல்கிறார்?” என்று கேட்க, நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில்தான் அந்த வசனம் இறங்கியது. எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு விஷயத்தில் வழக்கு இருந்துவந்தது. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றோம். அவர்கள், ‘‘உம்முடைய இரு சாட்சிகள். அல்லது அவருடைய சத்தியம் (தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன)” என்று கூறினார்கள். நான், ‘‘அப்படியென்றால், அவர் (அந்த யூதர் தயங்காமல்) பொய்ச் சத்தியம் செய்வாரே; (பொய்ச் சத்தியம் செய்வதைப் பற்றி) கவலைப்படமாட்டாரே” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர் ஒரு பிரமாணத்தின்போது அதன் மூலம் ஒரு சொத்தை அடைந்துகொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர், தம்மீது கோபம் கொண்ட நிலையில்தான் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்தச் சொற்களை உறுதிப்படுத்தி (குர்ஆனில் ஒரு வசனத்தை) அல்லாஹ் அருளினான்” என்று கூறிவிட்டு, இந்த இறைவசனத்தை (3:77) ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2669
- Book Index
- 32
Grades
- -