ஹதீஸ்கள்
#1840
ஸஹீஹ் அல்-புகாரீ - Penalty of Hunting while on Pilgrimage
அப்துல்லாஹ் பின் ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அல்அப்வா’ என்ற இடத்தில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகிய இருவரும் (ஒரு விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டனர். அதாவது “இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவலாம்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.“இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவக் கூடாது” என்று மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), என்னை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். நான் சென்றபோது, அவர்கள் கிணற்றின்மேல் ஊன்றப்பட்ட இரண்டு மரக்கழிகளுக்கிடையே ஒரு துணியால் திரையிடப்பட்டுக் குளித்துக் கொண்டிருந்தார்கள். “நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினேன். “யார் அது?” என்று கேட்டார்கள். “நான்தான் அப்துல்லாஹ் பின் ஹுனைன்! ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருக்கும்போது எவ்வாறு தமது தலையைக் கழுவுவார் கள்?’ என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை அனுப்பினார்கள்” என்று நான் கூறினேன். அபூஅய்யூப் (ரலி) அவர்கள், தமது கையைத் திரையின் மீது வைத்து, அவர்களின் தலை எனக்குத் தெரியுமளவிற்குத் திரையைக் கீழே இறக்கினார்கள். பிறகு, தண்ணீர் ஊற்றுகின்ற மனிதரிடம், “தண்ணீர் ஊற்றுவீராக!” என்றார்கள். அவர் அவர்களின் தலைமீது தண்ணீர் ஊற்றினார். அபூஅய்யூப் (ரலி) அவர்கள், தமது தலையை இரு கைகளாலும் தேய்த்துவிட்டு, முன்னும் பின்னுமாகக் கைகளைக் கொண்டுசென்றார்கள்; “இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்” என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Penalty of Hunting while on Pilgrimage
- Hadith Index
- #1840
- Book Index
- 20
Grades
- -