ஹதீஸ்கள்
#1683
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஹஜ்ஜுக்காக) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் மக்காவுக்குப் புறப்பட்டோம். பிறகு முஸ்தலிஃபாவுக்கு நாங்கள் வந்தபோது, அவர்கள் தனித்தனியாக (மஃக்ரிப், இஷா ஆகிய) இரண்டு தொழுகைகளை, தனித் தனி பாங்கு, இகாமத்துடன் தொழுதார்கள். இரு தொழுகைகளுக்கிடையே இரவு உணவு அருந்தினார்கள். பிறகு ஃபஜ்ர் உதயமானபோது தொழுதார்கள். அப்போது சிலர் ‘ஃபஜ்ர் உதயமாகிவிட்டது’ என்றும் சிலர் ‘ஃபஜ்ர் உதயமாகவில்லை’ என்றும் கூறிக்கொண்டிருந்தனர். பிறகு அவர்கள், “இந்த இடத்தில் இவ்விரு தொழுகைகளுக்கான நேரங்கள் நமக்கு மாற்றப்பட்டுள்ளன. ஒன்று: மக்ரிப் மற்றும் இஷாவாகும்; ஏனெனில், மக்கள் இருள் சூழ்ந்த பின்புதான் (இஷாவின் நேரத்தில்தான்) முஸ்தலிஃபாவை அடை வார்கள். மற்றொன்று: இந்த நேரத்தின் ஃபஜ்ர் தொழுகை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றார்கள். பிறகு அவர்கள் விடியும்வரை தங்கியிருந்துவிட்டு, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (உஸ்மான் (ரலி) அவர்கள்) இப்போது இங்கிருந்து (மினா) திரும்பினால் நபிவழியைச் செயல்படுத்தியவர் ஆவார்” எனக் கூறினார்கள். “இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் இக்கூற்று விரைவானதா, அல்லது உஸ்மான் (ரலி) அவர்கள் புறப்பட்டது விரைவானதா?” என்பது எனக்குத் தெரியவில்லை. (அந்த அளவுக்கு விரைவாக உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பிவிட்டார்கள்.) பிறகு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் ‘ஜம்ரத்துல் அகபா’வுக்கு வந்து கல்லெறியும்வரை ‘தல்பியா’ சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1683
- Book Index
- 163
Grades
- -