ஹதீஸ்கள்
#684
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குபாவில் இருந்த பனூ அம்ர் குலத் தாரிடையே தகராறு நிகழ்ந்துவிட்டதாகச் செய்தி வந்ததையொட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடையே சமாதானம் செய்வதற்காக அவர்களை நோக்கிச் சென்றுவிட்டார்கள். அப்போது (அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்துவிட்டது. (நபி (ஸல்) அவர்கள் வரத் தாமதமாகவே) தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “நீங்கள் மக்களுக்கு (தலைமை தாங்கி)த் தொழுகை நடத்துகிறீர்களா, நான் இகாமத் சொல்கிறேன்?” என்று கேட்டார்கள் “ஆம் (அவ்வாறே செய்வோம்)” என்று கூறிவிட்டு, அபூபக்ர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தலைமை தாங்கி) தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் (தொழுகை வரிசைகளை) விலக்கிக்கொண்டு (முதல்) வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ர் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வந்துவிட்டதைத் தெரிவிக்க) கை தட்டினார்கள். (பொதுவாக) அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப்பார்க்கமாட்டார்கள்; மக்கள் கை தட்டுவது அதிகரித்தபோது திரும்பிப் பார்த்தார்கள். (அங்கே முதல் வரிசையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி “அங்கேயே இருங்கள்” என்று சைகை செய்தார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு தம்மை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணித்ததற்காக (இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில்) தம் கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கி (திரும்பாமல் அப்படியே முதல்) வரிசையில் சேர்ந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே சென்று (நின்று) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும். “அபூபக்ரே! நான் உங்களை (அங்கேயே நின்று தொழுவிக்குமாறு) பணித்தும் நீங்கள் ஏன் அங்கேயே நிற்கவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதி இல்லை” என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து), “நீங்கள் அதிகமாகக் கைத்தட்டக் கண்டேனே, ஏன்? ஒருவருக்கு அவரது தொழுகையில் ஏதேனும் ஐயம் (ஆட்சேபம்) ஏற்பட்டால், அவர் (அதை உணர்த்தும் முகமாக) இறைவனை (‘சுப்ஹானல்லாஹ்’-அல்லாஹ் தூயவன் எனக் கூறி)த் துதிக்கட்டும். ஏனெனில், அவர் இறைவனைத் துதிக்கும்போது, அவர் பக்கம் கவனம் செலுத்தப்படும். கைத்தட்டும் முறை பெண்களுக்குரியதாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #684
- Book Index
- 78
Grades
- -