ஹதீஸ்கள்
#139
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அரஃபா’விலிருந்து (‘முஸ்தலிஃபா’வுக்குத்) திரும்பிக்கொண்டி ருந்தார்கள். ஒரு கணவாயை அடைந்த போது, அங்கு (தமது ஊர்தியைவிட்டு) இறங்கி, சிறுநீர் கழித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை செய்தார்கள்; அங்கத் தூய்மையை (சுருக்கமாகவே செய்தார்கள். நன்கு தேய்த்து மும்முறை கழுவி) முழுமையாக்கவில்லை. அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! (இங்கு) தொழப் போகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உமக்கு முன்னர் (உள்ள முஸ்தலிஃபாவில்) நடைபெறும்” என்று கூறிவிட்டு ஊர்தியில் ஏறிக்கொண்டார்கள். ‘முஸ்தலிஃபா’வுக்கு வந்ததும், இறங்கி மீண்டும் அங்கத் தூய்மை செய்தார்கள். இப்போது அங்கத் தூய்மையை நிறைவாகச் செய்தார்கள். பின்னர் தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டதும், மஃக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பிறகு ஒவ்வொரு மனிதரும் தத்தமது ஒட்டகத்தை தம் தங்குமிடங்களில் படுக்கவைத்தனர். தொடர்ந்து இஷா தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டபோது, அதையும் தொழுவித்தார்கள். (மஃக்ரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளுக்கிடையே வேறெந்தத் தொழுகையையும் அவர்கள் தொழவில்லை. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #139
- Book Index
- 5
Grades
- -